“உடல் எடை கூடினால் கவலை வேண்டாம்” - நடிகை சமீரா ரெட்டி


“உடல் எடை கூடினால் கவலை வேண்டாம்” - நடிகை சமீரா ரெட்டி
x
தினத்தந்தி 28 July 2020 12:52 AM GMT (Updated: 28 July 2020 12:52 AM GMT)

உடல் எடை கூடினால் கவலை வேண்டாம் என்று நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.


தமிழில் வாரணம் ஆயிரம், அசல், நடுநிசி நாய்கள், வேட்டை ஆகிய படங்களிலும் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள சமீரா ரெட்டி உடல் தோற்ற விமர்சனங்கள் பற்றி கூறியதாவது :-

“நாம் தோற்றத்தில் எப்படி இருந்தாலும் நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை நாமே விரும்ப வேண்டும். மற்றவர்கள் தோற்றத்தோடு நம்மை ஒப்பிட்டு பார்ப்பதை விட்டு விடவேண்டும். சமீபத்தில் தாயான ஒரு பெண், குழந்தை பிறந்ததும் எனது உடல் எடை கூடிவிட்டது. என்னை பார்த்தால் எனக்கே பிடிக்கவில்லை. என்மீதே வெறுப்பாக உள்ளது என்று எனக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினார். அதை படித்ததும் வேதனைபட்டேன். நாம் ஒல்லியாக இல்லையென்றால் அதை நினைத்து வேதனைப்படுவதை விட்டு விட வேண்டும். இருப்பதை வைத்து சந்தோஷப்பட வேண்டும். சினிமாவில் கூட மற்ற நடிகைகளோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள். நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. சந்தோஷமாக இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். உடல் தோற்றத்தை பொருட்படுத்த கூடாது. குண்டாக இருக்கிறீர்களா? கவலை வேண்டாம், கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ளலாம். அதற்காக சோர்ந்து போகாதீர்கள். சந்தோஷத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இருக்கிற வாழ்க்கையை அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள்.” இவ்வாறு கூறினார்.

Next Story