நடிகையை மணந்த இன்னொரு நடிகர் மன அழுத்தத்தால் தற்கொலை


நடிகையை மணந்த இன்னொரு நடிகர் மன அழுத்தத்தால் தற்கொலை
x
தினத்தந்தி 30 July 2020 10:15 PM GMT (Updated: 30 July 2020 9:40 PM GMT)

மராத்தி மொழி படங்களில் நடித்து வந்த நடிகர் அசுதோஷ் பாக்ரே மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையில் நடித்து பிரபலமான இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தத்தினால் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்னொரு நடிகரும் தற்போது மன அழுத்தத்தினால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். அந்த நடிகரின் பெயர் அசுதோஷ் பாக்ரே.

இவர் மராத்தி மொழி படங்களில் நடித்து வந்தார். பகர், இசார் தார்ல பக்கா உள்பட பல படங்கள் சிறந்த நடிப்புக்காக அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அசுதோஷ் பாக்ரே சொந்த ஊரான மராட்டிய மாநிலம் நண்டேட் பகுதியில் உள்ள கணேஷ் நகருக்கு சென்றார். அங்கு தனது பெற்றோர் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களாக அசுதோஷ் பாக்ரே மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அவருக்கு வயது 32. அசுதோஷ் மராத்தி நடிகை மயூரியை திருமணம் செய்து இருக்கிறார். மயூரி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

Next Story