நடிகை ஸ்ராவணி தற்கொலை வழக்கு; பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் கைது


நடிகை ஸ்ராவணி தற்கொலை வழக்கு; பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் கைது
x
தினத்தந்தி 17 Sep 2020 10:07 AM GMT (Updated: 17 Sep 2020 10:07 AM GMT)

தெலுங்கு டி.வி. நடிகை ஸ்ராவணி தற்கொலை வழக்கில் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் அசோக் ரெட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐதராபாத்,

பிரபல தெலுங்கு டி.வி. நடிகை ஸ்ராவணி. இவர் மனசு மமதா, மவுனராகம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். ஐதராபாத்தில் உள்ள மதுரா நகரில் வசித்து வந்தார்.  கடந்த 8ந்தேதி ஸ்ராவணி வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அவரது காதலர் தேவராஜ் ரெட்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரவாணியை தாக்கியதாக அவரது முன்னாள் காதலர் சாய்ரெட்டியும் கைதானார்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தெலுங்கில் வெற்றி பெற்ற ஆர்எக்ஸ் 100 உள்பட சில படங்களை தயாரித்த அசோக் ரெட்டி என்பவர் ஸ்ராவணியுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை விசாரிக்க போலீசார் தேடியபோது தலைமறைவாகி விட்டார்.

போலீஸ் அதிகாரி ஸ்ரீனிவாஸ் கூறும்போது, ஸ்ராவணியும் சாய்கிருஷ்ணாவும் காதலித்து பிரிந்துள்ளனர். பிறகு தேவராஜை காதலித்துள்ளார். அசோக் ரெட்டி தயாரித்த படத்தில் ஸ்ராவணி நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த மூன்று பேருமே அவரை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி உள்ளனர். இதனாலேயே மனம் உடைந்து தற்கொலை செய்து இருக்கிறார். சாய் கிருஷ்ணா, அசோக் ரெட்டி ஆகியோரால் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக ஸ்ராவணி பேசிய ஆடியோ பதிவை கைப்பற்றி உள்ளோம். அசோக் ரெட்டியை தேடி வருகிறோம் என்றார்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த தெலுங்கு பட தயாரிப்பாளர் அசோக் ரெட்டியை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.  கடந்த இரு தினங்களுக்கு முன், வழக்கில் தேடப்பட்ட சாய் கிருஷ்ணா ரெட்டி மற்றும் தேவராஜ் ரெட்டி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.  அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

நடிகை ஸ்ராவணி இறுதியாக தற்கொலை செய்வதற்கு முன் டிக்டாக் வழியே தனக்கு அறிமுகம் ஆன தேவராஜ் ரெட்டியை தொடர்பு கொண்டு தொலைபேசி வழியே பேசியுள்ளார்.  அதில், 3 பேரின் துன்புறுத்தல்களை சகிக்க முடியவில்லை.  அதனால் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று அவர் தேவராஜிடம் கூறியுள்ளார்.

Next Story