“பெண்கள் பிரச்சினையை பேசியதால் டி.வி. தொடரில் நடிக்கிறேன்” - நடிகை கஸ்தூரி பேட்டி


“பெண்கள் பிரச்சினையை பேசியதால் டி.வி. தொடரில் நடிக்கிறேன்” - நடிகை கஸ்தூரி பேட்டி
x
தினத்தந்தி 12 Dec 2020 9:45 PM GMT (Updated: 12 Dec 2020 5:15 PM GMT)

“பெண்கள் பிரச்சினை மற்றும் பெண்களின் பாதுகாப்பையும் விளக்கும் டி.வி. தொடரில் நடிக்கிறேன்” என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் துணிச்சலாக கருத்துகளைச் சொல்லும் ஒரு சில நடிகைகளில் கஸ்தூரியும் ஒருவர். 1991-ம் ஆண்டில் வெளிவந்த ‘ஆத்தா உன் கோவிலிலே’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், இவர். செந்தமிழ் பாட்டு, சின்னவர், புதியமுகம், ஆத்மா, உடன்பிறப்பு, எங்க முதலாளி, அமைதிப்படை உள்பட தமிழில் மட்டும் 70 படங்களில் நடித்து இருக்கிறார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களையும் சேர்த்து 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கஸ்தூரிக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. திருமணத்துக்கு பின், சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். படங்களில் நடிக்கவில்லை. சில வருட இடைவெளிக்கு பின், அவர் மீண்டும் நடிக்க வந்தார்.

இப்போது அவர், ‘சின்னத்திரை’ தொடர்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ‘அக்னி நட்சத்திரம்’ என்ற தொடரில், போலீஸ் உதவி கமிஷனராக நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

“அக்னி நட்சத்திரம், பெண்கள் பிரச்சினைகளை பேசுகிற தொடர். பெண்களின் பாதுகாப்பையும் விளக்கும் சீரியல். அதனால்தான் நான் நடிக்க சம்மதித்தேன். எனக்கு பொருந்துகிற கதாபாத்திரம். இதுபோன்ற கதாபாத்திரம் வந்தால், ‘சின்னத்திரை’, ‘வெள்ளித்திரை’ ஆகிய இரண்டிலும் நடிப்பேன். இன்னொரு ‘சின்னத்திரை’ நிகழ்ச்சியில் நடுவராக வருகிறேன். ஒரு படத்திலும் இதேபோல் நடுவராக நடிக்கிறேன்.”

இவ்வாறு கஸ்தூரி கூறினார்.

Next Story