“அண்ணாத்த” படப்பிடிப்பு ஜனவரி 10ம் தேதிக்குள் நிறைவடையும் - நடிகர் ரஜினிகாந்த்


“அண்ணாத்த” படப்பிடிப்பு ஜனவரி 10ம் தேதிக்குள் நிறைவடையும் - நடிகர் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 13 Dec 2020 10:38 AM GMT (Updated: 13 Dec 2020 10:38 AM GMT)

ஹைதராபாத்தில் நடைபெறும் அண்ணாத்த படப்பிடிப்பு வரும் ஜனவரி 10ம் தேதிக்குள் நிறைவடையும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை, 

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே ஐதராபாத்தில் தொடங்கி 40 சதவீதம் காட்சிகளை முடித்தனர். கொரோனா ஊரடங்கை தளர்த்தியதும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ரஜினியின் பாதுகாப்பு உள்ளிட்ட சில காரணங்களால் தாமதம் செய்தனர். 

தற்போது அரசியலுக்கு வருவதை ரஜினி உறுதிப்படுத்தி ஜனவரியில் கட்சி பெயரை அறிவிக்க இருப்பதால் அதற்கு முன்பாக படப்பிடிப்பை முடிக்கும் வேலையில் படக்குழுவினர் தீவிரமாகி உள்ளனர். ரஜினிகாந்தும் ஒரு மாதத்தில் தனது காட்சிகள் அனைத்தையும் படமாக்கி விடுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனைத்தொடர்ந்து டிசம்பர் 15ம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது இயக்குனர் சிவா நேற்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க தனி விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளார். 25 நாட்களில் தன் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பை முடித்து கொடுக்க திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அண்ணாத்த படப்பிடிப்பு வரும் ஜனவரி 10ம் தேதிக்குள் நிறைவடையும் என்று தெரிவித்தார்.

முன்னதாக ஐதராபாத்தில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. படப்பிடிப்பு தளத்தில் பலத்த பாதுகாப்பு அம்சங்களுடன் நடத்த படக்குழு தயாராகி வருகிறது. கடுமையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்பட்ட பின்னர் தான் குழுவினர் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்கள்.

படப்பிடிப்பில் சமூக விலகலை கடைபிடித்தல், ரஜினியை தவிர மற்றவர்கள் முக கவசம் அணிதல். படப்பிடிப்பு அரங்கு வாசலில் கிரிமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வெளியாட்கள் அவரை நெருங்க அனுமதி இல்லை. ஒரு மாதம் ஐதராபாத்திலேயே தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு ரஜினி சென்னை திரும்புகிறார். அதன்பிறகு அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக தெரிகிறது. 

Next Story