‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சரத்குமார் ஜோடியாக ஐஸ்வர்யாராய்


‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சரத்குமார் ஜோடியாக ஐஸ்வர்யாராய்
x
தினத்தந்தி 2 Jan 2021 11:30 PM GMT (Updated: 2 Jan 2021 8:13 PM GMT)

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சரத்குமார் ஜோடியாக ஐஸ்வர்யாராய் பிரமாண்டமான அரண்மனை அரங்கில் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது.

இந்திய திரையுலகில் மிக பிரமாண்டமான படைப்பாக திரைக்கு வந்த படங்கள், ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’. அந்த படங்களை விட மிக பிரமாண்டமான முறையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தை உருவாக்க டைரக்டர் மணிரத்னம் இரவு பகலாக வேலை செய்து வருகிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்கு மிக பிரமாண்டமான அரண்மனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில், வருகிற 6-ந் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இருக்கிறது. சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், நிழல்கள் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பெரிய பழுவேட்டரையராக நடிக்கும் சரத்குமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். படத்தில் நிறைய துணை நடிகர்-நடிகைகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்குவதற்கு ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதி வரை நடைபெற இருக்கிறது.

Next Story