பிரபல இந்தி நடிகர் கோவிந்தா - நடிகை பூமிபெட்னெகருக்கு கொரோனா தொற்று


பிரபல இந்தி நடிகர் கோவிந்தா - நடிகை பூமிபெட்னெகருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 6 April 2021 2:23 PM GMT (Updated: 6 April 2021 2:23 PM GMT)

பிரபல இந்தி நடிகர் கோவிந்தா - நடிகை பூமிபெட்னெகருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

பிரபல இந்தி நடிகர் கோவிந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோவிந்தா கூறும்போது, ‘’நான் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட்டு வந்தேன். ஆனாலும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. 

லேசான பாதிப்பே உள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு தொற்று இல்லை என்று வந்தது. எனது மனைவி சுனிதாவுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று இரண்டு வாரங்களுக்கு முன்பு குணமடைந்தார். தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என்று கூறியுள்ளார்.

இதுபோல் இந்தி நடிகை பூமி பெட்னெகருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் என்னை தனிமைப்படுத்தி உள்ளேன். மருத்துவர்கள் அறிவுரையை பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நான் பாதுகாப்புடன் இருந்தும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. அனைவரும் முககவசம் அணியுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்'' என்று கூறியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், நடிகைகள் நிவேதா தாமஸ், கவுரி கிஷன் ஆகியோரும் கொரோனா தொற்றில் சிக்கினர்.

கொரோனா இரண்டாவது அலையில் முன்னணி நடிகர்-நடிகைகள் சிக்கி வருவது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story