நடிகர் செந்திலுக்கு கொரோனா குடும்பத்தினருக்கும் தொற்று


நடிகர் செந்திலுக்கு கொரோனா குடும்பத்தினருக்கும் தொற்று
x
தினத்தந்தி 14 April 2021 5:58 AM GMT (Updated: 14 April 2021 5:58 AM GMT)

நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் செந்தில். இவரும் கவுண்டமணியும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன. தற்போதும் படங்களில் செந்தில் நடித்து வருகிறார். அரசியலிலும் ஈடுபட்டு உள்ளார். ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்த அவர் சமீபத்தில் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். 

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்த பிறகு சில தினங்களுக்கு முன்பு செந்திலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதுபோல் செந்திலின் மனைவி, மகன், மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

இதையடுத்து செந்தில் தனது குடும்பத்தினருடன் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில் உடல்நிலை சீராக உள்ளதாகவும் விரைவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா 2-வது அலை நாடுமுழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றில் அரசியல் கட்சி பிரமுகர்களும் நடிகர், நடிகைகளும் சிக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story