மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடிகைகள் குஷ்பு, ஓவியா கண்டனம்


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடிகைகள் குஷ்பு, ஓவியா கண்டனம்
x
தினத்தந்தி 26 May 2021 1:10 AM GMT (Updated: 26 May 2021 1:10 AM GMT)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடிகைகள் குஷ்பு, ஓவியா கண்டனம்.

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததை சமூக வலைத்தளத்தில் அம்பலப்படுத்தி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வருகிறார்கள். நடிகைகளும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் கொடுமைகளை படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து இருப்பது மட்டும் உதவாது. உடனடியாக விசாரணை நடத்தி குற்றம் செய்து இருப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் மனதில் பயத்தோடு பள்ளிக்கு செல்ல முடியாது. அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கடுமையான குற்றம். இதில் அரசியலையோ, சாதியையோ கொண்டு வரக்கூடாது. குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும். பயந்துள்ள குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

நடிகை ஓவியா, டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் நேர்மையை நிஜமாகவே பாராட்டுகிறேன். மீடூ குறித்து வெளிப்படுத்துவதற்கும் பேசுவதற்கும் தைரியம் வேண்டும் என்று எனக்கு புரிகிறது'' என்று கூறியுள்ளார்.



Next Story