தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி


தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி
x
தினத்தந்தி 12 Oct 2021 5:41 AM GMT (Updated: 12 Oct 2021 5:41 AM GMT)

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்தார்.

விஷ்ணு மஞ்சு தலைவராக வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் விஷ்ணு மஞ்சு அணியினர், பிரகாஷ்ராஜ் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதால் அவரை ஆதரிக்கக்கூடாது என்றும், தெலுங்கு நடிகர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றும் பிரசாரம் செய்தனர். பிரகாஷ்ராஜ் தோல்விக்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் ஐதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, ‘‘நான் 21 வருடங்களாக தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். என்னை வெளியில் இருந்து வந்த நபர், பயங்கரவாதி என்றெல்லாம் பிரசாரம் செய்து தோற்கடித்து விட்டனர். எதிரணியினர் சொன்ன இந்த கருத்துகளை ஓட்டு போட்ட நடிகர்-நடிகைகளும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் பாகுபாடு காட்டும் சக கலைஞர்களுடன் என்னால் இருக்க முடியாது. எனக்கு தன்மானம் உள்ளது. எனவே எனது தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். ஆனாலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பேன். தெலுங்கு மாநிலத்தில் பிறக்காமல் போனது எனது தவறு அல்ல” என்றார். தேர்தலில் பிரகாஷ்ராஜை ஆதரித்த நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவும் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தார்.



Next Story