'இனி வில்லனாக நடிக்க மாட்டேன்' - ஷாருக்கானால் விஜய்சேதுபதி எடுத்த முடிவு


இனி வில்லனாக நடிக்க மாட்டேன் - ஷாருக்கானால் விஜய்சேதுபதி எடுத்த முடிவு
x

நடிகர் விஜய்சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்க போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய்சேதுபதி சமீபகாலமாக மற்ற நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். ரஜினியின் 'பேட்ட', விஜய்யின் 'மாஸ்டர்', கமல்ஹாசனின் 'விக்ரம்' உள்ளிட்ட படங்களில் விஜய்சேதுபதியின் வில்லன் கதாபாத்திரங்கள் ஹீரோ கதாபாத்திரங்களை விட அதிகளவு பேசப்பட்டன.

இதனால் நிறைய படங்களில் வில்லனாக நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தன. தமிழ் தவிர மற்ற மொழி படங்களிலும் வில்லனாக நடிக்க அழைப்புகள் வந்தன. சமீபத்தில் இந்தியில் ஷாருக்கானின் 'ஜவான்' படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த நிலையில் 'இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன்' என விஜய்சேதுபதி அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து விஜய்சேதுபதி அளித்துள்ள பேட்டியில், 'கதாநாயகர்கள் பலர் தங்கள் படங்களில் வில்லனாக நடிக்கும்படி என்னிடம் கேட்டுக்கொண்டதால் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன். வில்லனாக நடிப்பதில் நிறைய அழுத்தங்கள் உள்ளன.

ஹீரோவைவிட வலுவாக தெரிந்து விடக்கூடாது என்று கவனித்து நடிக்க வைப்பார்கள். வில்லனாக நான் நடித்த நிறைய காட்சிகளை நீக்கியும் இருக்கிறார்கள். இதனால் இனிமேல் வில்லனாக நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்' என்றார்.

'ஜவான்' படத்துக்கு பிறகு விஜய்சேதுபதி இந்த முடிவை எடுத்து இருப்பதால் அந்த படத்தின் கதாநாயகன் ஷாருக்கான் கொடுத்த அழுத்தம் காரணமாக இருக்குமோ என்று வலைத்தளத்தில் பலரும் பேசி வருகின்றனர்.


Next Story