நாக சைதன்யாவைப் பிரிகிறார் சமந்தா! சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 Oct 2021 11:06 AM GMT (Updated: 2 Oct 2021 11:06 AM GMT)

கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். 

இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஐதராபாத்தில் வசித்து வந்தார். சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து 'சமந்தா அக்கினேனி'என்று மாற்றிக் கொண்டார். 

இந்த சூழலில், சமந்தா அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு வெறும் 'S' என்று தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் சமீபத்தில் மாற்றியது நாக சைதன்யா - சமந்தா ஜோடி விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்ற வதந்தி பரவியது. அதேசமயம், தற்போது 'சகுந்தலம்' படத்தில் நடித்து வருவதால் 'S' என மாற்றினார் என்றும் சொல்லப்பட்டது. சமீபத்தில் நடந்த நாகார்ஜுனா பிறந்த நாள் நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்கவில்லை. 

அதேபோல், அமீர்கானுக்கு நாகார்ஜுனா குடும்பத்தினர் வீட்டில் விருந்து அளித்தனர். இதில் நாகார்ஜுனா, நாக சைதன்யா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால், சமந்தா மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதன் மூலமும், இருவரும் விவாகரத்து செய்து பிரியப்போவது உறுதி என தகவல் வெளியானது. ஆனால் சமந்தா - நாக சைதன்யா தரப்பில் இருந்து இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

இந்நிலையில் நடிகை சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நானும், நாக சைதன்யாவும் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். நண்பர்களும் நலம் விரும்பிகளும் இந்த கடினமான காலகட்டத்தில் எங்களை ஆதரியுங்கள். எங்களுக்கு சுதந்திரம் கொடுத்து இதனை எளிதாக கடந்துபோக எங்களுக்கு உதவுங்கள்” என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளா்.

Next Story