சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி கைது


சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி கைது
x
தினத்தந்தி 13 Dec 2016 7:30 PM GMT (Updated: 13 Dec 2016 1:28 PM GMT)

சங்கரன்கோவிலில், அ.தி.மு.க. பிரமுகரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவிலில், அ.தி.மு.க. பிரமுகரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

அ.தி.மு.க. பிரமுகர்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் 4–வது தெருவைச் சேர்ந்தவர் தனபால் (வயது 51). இவர் நெல்லை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவராக இருந்து வருகிறார்.

இவர் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள கண்டிகைப்பேரியில் கல் குவாரி நடத்தி வருகிறார். அந்த கல்குவாரியில் மாரிச்சாமி (30) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு கல்குவாரியில் ஒரு இடத்தில் வைத்திருந்த செல்போன் மெமரி கார்டு உள்ளிட்ட சில பொருட்கள் திருட்டு போனது. அவற்றை மாரிச்சாமி எடுத்திருக்கலாம் என தனபால் சந்தேகம் அடைந்தார். இதனால் மாரிச்சாமிக்கு சம்பளத் தொகையை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

அரிவாள் வெட்டு

தனது சம்பளத்தை தருமாறு தனபாலிடம் கேட்டதற்கு, கல் குவாரியில் காணாமல் போன பொருட்களை திரும்ப தந்தால்தான் சம்பளம் தருவேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாரிச்சாமி, அரிவாளால் தனபாலை வெட்டியதாக தெரியவருகிறது. பலத்த காயம் அடைந்த தனபால் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து மாரிச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story