திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிஜிட்டல் பலகைகள் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்படுமா?


திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிஜிட்டல் பலகைகள் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்படுமா?
x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 15 Dec 2016 3:39 PM GMT)

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிஜிட்டல் பலகைகள் பொருத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. ரெயில் நிலையம் திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு தினசரி ரெயில்கள், வாராந்திர ரெயில்கள் என 80–க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்த

திண்டுக்கல்,

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிஜிட்டல் பலகைகள் பொருத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ரெயில் நிலையம்

திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு தினசரி ரெயில்கள், வாராந்திர ரெயில்கள் என 80–க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. அந்த வகையில் தினமும் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் ரெயில் நிலையத்திற்கு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு ரெயில் நிலையத்தை ரூ.7 கோடி செலவில் புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

இதில் புதிய நடைமேடை, நடைமேடை மேம்பாலம், லிப்ட் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட இருக்கின்றன. இதற்கிடையே 3–வது நடைமேடையில் ரெயில் வந்து நிற்கும் போது பெட்டிகள் நிற்குமிடத்தை தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் பலகைகள் இருந்தன. அதில் ரெயில் வந்து நிற்கும் முன்பே பெட்டிகளின் எண் ஒளிரும். இது ரெயில் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

நவீன டிஜிட்டல் பலகைகள்

இதற்கிடையே அதை மாற்றிவிட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நவீன டிஜிட்டல் தகவல் பலகைகளை பொருத்தும் பணி தொடங்கியது. அதில் ரெயில்களின் பெயர், எண், பெட்டியின் எண் ஆகியவை ஒளிரும். அதேபோல் நடைமேடைகள், டிக்கெட் எடுக்கும் இடத்திற்கு அருகிலும் மெகா டிஜிட்டில் தகவல் பலகைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், பணிகள் மிகவும் மந்தமாக நடக்கின்றன. இதனால் 3, 4–வது நடைமேடை முழுவதும் சிறிய டிஜிட்டல் பலகைகளும், 3–வது நடைமேடையில் ஒரு மெகா டிஜிட்டல் பலகையும் பொருத்தப்பட்டன. இதில் 3–வது நடைமேடையில் உள்ள டிஜிட்டல் பலகைகள் மட்டுமே கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயல்பாட்டுக்கு வந்தது. அவையும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக செயல்படவில்லை.

பயணிகள் தவிப்பு

மேலும் டிக்கெட் எடுக்கும் இடத்தில் மெகா டிஜிட்டல் பலகை பொருத்தப்படவில்லை. அது, சுரங்கப்பாதைக்கு அருகில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக காட்சி பொருளாக கிடக்கிறது. மேலும் 1, 2, 5–வது நடைமேடைகளில் நவீன டிஜிட்டல் பலகைகள் இன்னும் பொருத்தப்படவில்லை. இதனால் ரெயில்கள் வரும் நேரம், பெட்டிகள் நிற்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.

எனவே, பயணிகளின் நலன்கருதி செயல்படாத டிஜிட்டல் பலகைகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மேலும் டிக்கெட் எடுக்கும் இடம் மற்றும் 1, 2, 5–வது நடைமேடைகளில் டிஜிட்டல் பலகைகள் பொருத்தும் பணியை துரிதப்படுத்தி, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது ரெயில் பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story