திருமானூர் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணிகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி


திருமானூர் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணிகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 18 Dec 2016 10:45 PM GMT (Updated: 18 Dec 2016 8:48 PM GMT)

திருமானூர் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணிகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருமானூர்,

திருமானூர் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணியால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சாலைப்பணி

அரியலூர் மாவட்டம் திருமானூரில் இருந்து ஏலாக்குறிச்சி வழியாக தூத்தூர் வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. இந்த சாலை கடந்த 44 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதில் போக்குவரத்து சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த சாலையில் திருமானூரிலிருந்து ஏலாக்குறிச்சி வரையிலும் மற்றும் தூத்தூர் வரையிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் மற்றும் மினி பேருந்துகளும் இயங்கி வருகிறது.

இந்த பேருந்துகள் பல கிராமங்கள் வழியாக செல்வதால், கிராமமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது இந்த சாலையில் மாத்தூர் முதல் குருவாடி வரை சுமார் 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.4½ கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒருவழி சாலையான இந்த சாலை இருவழிச் சாலையாக விரிவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாத்தூருக்கும்-குருவாடிக்கும் இடையில் 120 மீட்டர் தூரத்திற்கு சாலை தனிநபர் ஒருவரின் இடத்தின் வழியாக செல்வதாக கூறி, சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது.

வாகன ஓட்டிகள் அவதி

இதனால் சாலை அமைக்கும் பணிகள் பாதியிலேயே நிற்கிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சாலை பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story