கன்னியாகுமரி பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் அதிகாரி விளக்கம்


கன்னியாகுமரி பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 19 Dec 2016 10:45 PM GMT (Updated: 19 Dec 2016 9:11 PM GMT)

கன்னியாகுமரி பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் அதிகாரி விளக்கம்

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு விளக்கம் அளித்தார்.

ஆலோசனை கூட்டம்

இயேசு கிறிஸ்து பிறப்பை நினைவுகூறும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருகிற 25-ந் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்க தொடங்கிவிட்டன. மேலும் கிறிஸ்தவர்களின் வீடுகளிலும், ஆலயங்களின் வளாகங்களிலும் கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் குடில் அமைத்து உள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் கிறிஸ்துமஸ் தாத்தா பவனியும் ஆங்காங்கே ‘களை’ கட்ட தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில் கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகிகள், கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கன்னியாகுமரி, தென்தாமரைகுளம், அஞ்சுகிராமம், ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி, சுசீந்திரம் போலீஸ் நிலைய பகுதிகளில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு கடை பிடிக்க வேண்டிய விதி முறைகள் பற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி கூடாது

கடந்த முறை கிறிஸ்துமஸ் குடில் வைக்கப்பட்ட இடங்களில் மட்டும் இந்த ஆண்டும் குடில் அமைக்க வேண்டும். பிரச்சினைக்குரிய இடத்தில் குடில் வைக்க இடம் தேர்வு செய்ய கூடாது. ஓலைகூரை அமைக்க கூடாது.

கிறிஸ்மஸ் குடில்களில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியில் பாடல்கள் இசைக்கக்கூடாது. கலை நிகழ்ச்சிக்கு போலீஸ் முன் அனுமதி பெற வேண்டும்.

வீட்டு வளாகம் மற்றும் திருச்சபையின் முன்போ அல்லது பொது இடத்தில் அனுமதிக்கப்பட்ட குடில்களுக்கு அவைகளை அமைப்பவர்களே பொறுப்பேற்க வேண்டும். கிறிஸ்துமஸ் குடில்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story