அரூர் அருகே, மதுகுடித்த போது தகராறு: நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து தொழிலாளி படுகாயம்


அரூர் அருகே, மதுகுடித்த போது தகராறு: நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 27 Feb 2017 10:30 PM GMT (Updated: 27 Feb 2017 1:28 PM GMT)

அரூர் அருகே மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

அரூர்,

துப்பாக்கி சூடு

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி புதுவளவு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 32), அதேபகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (33). தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் உறவினர்கள். பெருமாளின் உறவுக்கார பெண்ணுக்கும், லட்சுமணனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பெருமாளும், லட்சுமணனும் மதுவாங்கி கொண்டு அந்த பகுதியில் அமர்ந்து குடித்தனர். அப்போது கள்ளத்தொடர்பு குறித்து அவர்கள் 2 பேரும் பேசிக்கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது பெருமாள் லட்சுமணனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன் வீட்டுக்கு சென்று நாட்டுத்துப்பாக்கியை எடுத்து வந்து பெருமாளை சுட்டார்.

தொழிலாளி படுகாயம்

இதில் துப்பாக்கி குண்டுகளின் துகள்கள் பெருமாளின் நெஞ்சு மற்றும் வயிறு பகுதியில் பாய்ந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். அதன்பின்னர் லட்சுமணன் நாட்டுத்துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பெருமாளின் சத்தம் கேட்டு உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பெருமாளை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லட்சுமணனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story