‘என் தேசம் என் உரிமை’ கட்சி நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்


‘என் தேசம் என் உரிமை’ கட்சி நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 27 Feb 2017 10:15 PM GMT (Updated: 27 Feb 2017 7:23 PM GMT)

‘என் தேசம் என் உரிமை’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

சென்னை,

‘என் தேசம் என் உரிமை’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எபினேசர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். பின்னர் எபினேசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

நாங்கள் கடந்த 25–ந் தேதியன்று தான் ‘என் தேசம் என் உரிமை’ கட்சியை தொடங்கினோம். அன்றுமுதல் எனக்கும், எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் சிலர் செல்போனில் பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எங்கள் கட்சியின் பெயரை கெடுக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் அவதூறு தகவல்களை பரப்புகிறார்கள். எங்கள் கட்சியை கலைக்கச் சொல்கிறார்
கள். சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தான் இதுபோன்ற மிரட்டல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். கட்சி ஆரம்பித்த 3 நாட்களில் 6 லட்சம் பேர் எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும்படி எங்கள் கட்சி சார்பிலும், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அது தொடர்பாக கையெழுத்து இயக்கமும் மாநிலம் முழுவதிலும் எங்கள் கட்சி சார்பில் நடக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடர இருக்கிறோம். நாங்கள் கொடுத்துள்ள புகார் மனு தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story