தாராவியில் பன்றி காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் பலி சாவு எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு


தாராவியில் பன்றி காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் பலி சாவு எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2017 9:56 PM GMT (Updated: 8 Jun 2017 9:56 PM GMT)

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாராவியை சேர்ந்த கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பை,

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாராவியை சேர்ந்த கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மும்பையில் நடப்பாண்டு பன்றி காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

கர்ப்பிணி பெண் பலி

மும்பை தாராவி பகுதியை சேர்ந்தவர் 32 வயது கர்ப்பிணி பெண். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து இவர் வீட்டருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இந்தநிலையில் அவரின் உடல்நிலை மோசமானது. அவர் மேல் சிகிச்சைக்காக சயான் மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பையில் 7 பேர்

நடப்பாண்டில் பன்றி காய்ச்சலுக்கு மும்பையில் பலியாகும் 2–வது கர்ப்பிணி பெண் இவர் ஆவார். இதேபோல இதுவரை மும்பையில் 7 பேர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் கடந்த 5 மாதத்தில் 230 பேர் பலியாகி உள்ளனர். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் கடைசி நேரத்தில் சிகிச்சைக்காக வருவதால் தான் காப்பாற்ற முடியாமல் போகிறது மாநகராட்சி ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறினார்.


Next Story