மதுக்கடையை அகற்றக்கோரி குடும்ப அட்டைகளை தூக்கி எறிந்து கிராம மக்கள் போராட்டம்


மதுக்கடையை அகற்றக்கோரி குடும்ப அட்டைகளை தூக்கி எறிந்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2017 11:00 PM GMT (Updated: 21 Aug 2017 9:17 PM GMT)

மதுக்கடையை அகற்றக்கோரி திருவாரூர் கலெக்டர்் அலுவலகம் முன்பு குடும்ப அட்டைகளை தூக்கி எறிந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தி்ருவாரூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு பதிலாக வேறு இடங்களில் மதுக்கடைகள் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்்குடி அருகே பைங்காட்டூர் ஊராட்சிக்குட்பட்ட மேலபுத்தூர் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. அதனை எதிர்்த்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த மதுக்கடை விரைவில் அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் இதுவரை அந்த மதுக்கடை அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக குடும்ப அட்டைகளை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்். மேலும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றையும் தூக்கி எறிந்தனர்.

அப்போது பெண்கள், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மதுக்கடையை உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். பின்னர் அங்கிருந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். குடும்ப அட்டையை தூக்கி எறிந்து நடத்தப்பட்ட போராட்டத்தினால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story