சிங்கம்புணரி மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள், 31 பேர் காயம்


சிங்கம்புணரி மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள், 31 பேர் காயம்
x
தினத்தந்தி 15 Jan 2018 10:30 PM GMT (Updated: 15 Jan 2018 7:59 PM GMT)

சிங்கம்புணரியில் பாரம்பரிய முறைப்படி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 31 பேர் காயமடைந்தனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி கிராமத்தார்கள் சார்பில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்று மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக கடந்த 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் இங்கு மஞ்சுவிரட்டு நடைபெறவில்லை. கடந்த ஆண்டு தடையை மீறி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்தநிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்த தடை இல்லை என்று கோர்ட்டு கூறியதை அடுத்து சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டு நடத்த கிராம கமிட்டியினர் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மாட்டு பொங்கலையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

சிங்கம்புணரி சீரணி அரங்கம் முன்பு மதியம் 12 மணிக்கு மஞ்சுவிரட்டு தொடங்கியது. முன்னதாக சேவுகமூர்த்தி அய்யனார் கோவில் காளைகள் ஊர்வலமாக பாரம்பரிய முறைப்படி மரியாதையுடன் அழைத்துவரப்பட்டன. பின்னர் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு, பின்னர் மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அதனை பிடிக்க முயன்றனர். இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை மட்டுமின்றி, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. முடிவில் போட்டியில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிங்கம்புணரி மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் 31 பேர் காளைகள் முட்டி காயம் அடைந்தனர். பின்னர் காயம் அடைந்தவர்கள் சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் காயமடைந்தவர்களில் மணியம்பட்டியை சேர்ந்த ராமைய்யா(வயது 55), கல்லம்பட்டி கேடுகிரி வீரயன்(55), கண்ணமங்கலபட்டி தமிழரசன்(25), சொக்கலிங்கபுரம் மகேந்திரன்(27) ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

Next Story