கொப்பா அருகே 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு பெண் தற்கொலை


கொப்பா அருகே 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 15 Jan 2018 10:08 PM GMT (Updated: 15 Jan 2018 10:08 PM GMT)

கொப்பா அருகே 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார். கணவர் தனி குடித்தனம் வராததால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

சிக்கமகளூரு, 

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா எம்மே ஹடகலு கிராமத்தை சேர்ந்தவர் மோகன். விவசாயி. இவரும், அதேப்பகுதியை சேர்ந்த வினுதா என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு பிரானேஷ் (வயது 4), மனிக் (1½) என்ற 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வினுதாவுக்கும், மோகனின் தாய் லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால், வினுதா தனி குடித்தனம் செல்லலாம் என்று மோகனிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு மோகன் மறுத்ததாக தெரிகிறது. இதன்காரணமாக கணவன்-மனைவி இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தகராறு

இந்த நிலையில் வினுதா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது 2 மகன்களுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன், வினுதாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்று வினுதாவிடம் தனி குடித்தனம் அழைத்து செல்வதாக கூறி மனைவியையும், மகன்களையும் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால் மோகன் கூறியப்படி வினுதாவை தனி குடித்தனத்துக்கு அழைத்து செல்லவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் வினுதாவுக்கும், மாமியார் லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வினுதா, தனது மகன்களை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார். மாலை வெகுநேரமாகியும் வினுதாவும் மகன்களும் வீட்டுக்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மோகன், அவர்களை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

தற்கொலை

இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில், வினுதாவும் அவருடைய 2 மகன்களும் கிணற்றில் பிணமாக மிதந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டனர். அவர்களின் 3 பேரின் உடல்களை பார்த்து மோகன் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாலேஒன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொப்பா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் தனி குடித்தனம் வராததால் வினுதா தனது 2 மகன்களை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

சோகம்

இதற்கிடையே பாலேஒன்னூர் போலீசாரிடம் வினுதாவின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதில், வினுதாவின் கணவர் மோகன், மாமியார் லட்சுமி ஆகியோர் கொடுமைப்படுத்தியதால் தான் வினுதா தனது 2 மகன்களை கொன்று தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து பாலேஒன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப தகராறில் 2 மகன்களை கொன்று பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story