ரெயிலில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து 9 மாதங்களில் ரூ.121 கோடி அபராதம் வசூல்


ரெயிலில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து 9 மாதங்களில் ரூ.121 கோடி அபராதம் வசூல்
x
தினத்தந்தி 15 Jan 2018 10:24 PM GMT (Updated: 15 Jan 2018 10:24 PM GMT)

ரெயிலில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து 9 மாதங்களில் ரூ.121 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.

மும்பை, 

மும்பையில் மின்சார ரெயில்சேவை மக்களின் உயிர்நாடியாக உள்ளது. தினமும் சுமார் 75 லட்சம் பேர் மின்சார ரெயில்களில் பயணம் செய்கின்றனர். இதில், ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களால், ரெயில்வே நிர்வாகத்திற்கு அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ரெயிலில் ஓசிப்பயணம் செய்து பிடிபட்டவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்து மத்திய ரெயில்வே தகவல்கள் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த டிசம்பர் மாதம் மட்டும் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்த 2 லட்சத்து 6 ஆயிரம் பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.8 கோடியே 76 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வசூலான தொகையை விட 14.1 சதவீதம் அதிகம் ஆகும். அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1 லட்சத்து 81 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.7 கோடியே 68 லட்சம் வசூல் செய்யப்பட்டு இருந்தது.

ரூ.121 கோடி வசூல்

இதேபோல கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதத்தில் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் ஓசிப்பயணம் செய்த சுமார் 24 லட்சம் பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.121 கோடியே 90 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2016-ம் ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலான அபராதத்தைவிட 17.94 சதவீதம் அதிகம் ஆகும்.

2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.100 கோடியே 53 லட்சம் அபராதம் வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story