அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 17 Jan 2018 10:45 PM GMT (Updated: 17 Jan 2018 7:41 PM GMT)

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூர்,

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். 101-வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி அரியலூர் மாவட்டத்திலும் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தொடர்ந்து அரியலூர் ஒற்றுமை திடலிலிருந்து அ.தி.மு.க.வினர், திருச்சி சாலை, பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக மாங்காய் பிள்ளையார் கோவில் தெருக்கு வந்தனர். பின்னர் அங்கு உள்ள எம்.ஜி.ஆர். சிலை மற்றும் பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசு தலைமை கொறடா உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராம.ஜெயலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர். 101-வது பிறந்த நாளை முன்னிட்டு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் 600-க்கும் மேற்பட்டோர் காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலமாக சென்று ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். தா.பழூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், சுத்தமல்லி பிரிவு சாலை அருகே அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தா.பழூர் ஒன்றிய தே.மு.தி.க. சார்பில், எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் அறிவழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமானூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில் கட்சியினரும், டி.டி.வி. தினகரன் அணி சார்பில் ஒன்றிய செயலாளர் வடிவேல் முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருமானூர் மற்றும் கீழக்காவட்டாங்குறிச்சியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். லட்சிய தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வினோத்ராஜ் தலைமையில், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு அ.தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி மற்றும் தே.மு.தி.க. சார்பில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.நகர செயலாளர் பெருமாள் தலைமையில், கட்சியினர் ஊர்வலமாக சென்று உடையார்பாளையம் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதிய பஸ்நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவ சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதை தொடர்ந்து கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மருதராஜா எம்.பி., தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராஜாராம், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் புதுவேட்டக்குடி கிருஷ்ணசாமி, நத்தக்காடு கர்ணன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், ஜெ.பேரவை, இளைஞர் பாசறை, மகளிர் அணி, மருத்துவர் அணி, வழக்கறிஞர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல மாவட்ட எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் புதிய பஸ்நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கழக அமைப்பு செயலாளர் கலைவாணன் தலைமையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story