விருத்தாசலத்தில் வாலிபர் கொலை வழக்கில் கைதான டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


விருத்தாசலத்தில் வாலிபர் கொலை வழக்கில் கைதான டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 17 Jan 2018 10:45 PM GMT (Updated: 17 Jan 2018 10:29 PM GMT)

விருத்தாசலம் வி.சாத்தமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜம்புலிங்கம்.

கடலூர்,

விருத்தாசலம் வி.சாத்தமங்கலம் வடக்குதெருவை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் (வயது 35). இவரை முன்விரோதம் காரணமாக கடந்த 8.12.2017 அன்று குப்பநத்தநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த கண்ணன் (35), புதுக்குப்பத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார்(32), தேவேந்திரன், மீனாட்சிசுந்தரம், வீரசோழகன், பாண்டியன் ஆகிய 6 பேரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்து, அவரது உடலை எரித்தனர்.

 இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய வினோத்குமார் மீது விருத்தாசலம், மங்கலம்பேட்டை போலீஸ் நிலையங்களில் 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் வினோத் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வினோத்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்தற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

 இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கண்ணன் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story