ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தனர்


ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தனர்
x
தினத்தந்தி 18 Jan 2018 10:00 PM GMT (Updated: 18 Jan 2018 9:18 PM GMT)

ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தனர்.

பெங்களூரு,

ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தனர்.

பா.ஜனதாவில் சேர்ந்தனர்


கர்நாடக மாநில ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் சிவராஜ் பட்டீல், மானப்பா வஜ்ஜல். இவர்கள் 2 பேரும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இதில் சிவராஜ் பட்டீல் ராய்ச்சூர் நகர தொகுதியில் இருந்தும், மானப்பா வஜ்ஜல் லிங்கசூரு தொகுதியில் இருந்தும் கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். இவர்கள் 2 பேரும் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தனர். அவர்களுக்கு கட்சி கொடியை வழங்கி எடியூரப்பா கட்சியில் சேர்த்துக் கொண்டார்.

இதில் எடியூரப்பா பேசியதாவது:-

ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிவராஜ் பட்டீல், மானப்பா வஜ்ஜல் ஆகியோர் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளனர். அவர்களை நான் மனதார வரவேற்று கட்சியில் சேர்த்துக் கொண்டேன். அவர்களின் வருகை மூலம் ராய்ச்சூர் பகுதியில் எங்கள் கட்சிக்கு யானை பலம் கிடைத்துள்ளது. கடந்த 2 மாதங்களாக நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். நான் பரிவர்த்தனா யாத்திரை மேற்கொண்டுள்ளேன். இதுவரை 190 தொகுதிகளில் பயணத்தை முடித்துள்ளேன். மாநிலம் முழுவதும் எனது பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

73 நாட்கள் தான் உள்ளது


இதை பார்த்து இன்னும் நிறைய பேர் எங்கள் கட்சியில் சேர தயாராக உள்ளனர். கர்நாடக காங்கிரஸ் அரசு கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை 50 சதவீதத்தை தான் செலவு செய்துள்ளது. இந்த அரசின் பதவி காலம் இன்னும் 73 நாட்கள் தான் உள்ளது.

அதற்குள் இன்னும் ரூ.80 ஆயிரம் கோடி செலவு செய்ய வேண்டும். இதில் கொள்ளையடிக்க இந்த அரசு திட்டமிட்டு உள்ளது. கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருப்பதால் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கர்நாடக அரசு தாக்கல் செய்யக்கூடாது. இது மக்களின் முடிவுக்கு எதிராக அமைந்துவிடும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

பியூஸ் கோயல்


இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரியும், கர்நாடக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ்கோயல், மத்திய மந்திரி அனந்தகுமார், கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story