பொருட்காட்சி மூலம் அரசுக்கு ரூ.6¾ லட்சம் வருமானம்


பொருட்காட்சி மூலம் அரசுக்கு ரூ.6¾ லட்சம் வருமானம்
x
தினத்தந்தி 18 Jan 2018 11:00 PM GMT (Updated: 18 Jan 2018 9:32 PM GMT)

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்த பொருட்காட்சி மூலம் அரசுக்கு ரூ.6¾ லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந்தேதி அரசு பொருட்காட்சி தொடங்கியது. இந்த பொருட்காட்சி நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். பின்னர் அரசு பொருட்காட்சியில் அரங்குகள் அமைத்திருந்த துறை அலுவலர்களுக்கு நினைவு பரிசு வழங்கியதுடன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் முதன்முறையாக அரசு பொருட்காட்சி 45 நாட்கள் நடைபெற்றது.

இந்த பொருட்காட்சியில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் 30 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் பொழுது போக்கும் விதமாக உணவு விடுதிகள், ராட்டினம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நாள்தோறும் நலிவுற்ற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு நாடகங்களும் நடத்தப்பட்டன. இந்த கண்காட்சியில் 61 ஆயிரத்து 481 பேர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இதன் மூலம் நுழைவுகட்டணமாக அரசுக்கு 6 லட்சத்து 75 ஆயிரம் வருமானம் கிடைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ், மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டி, ஊராட்சி உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாற்றுத்திறனாளி நல அதிகாரி ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story