குழந்தை இல்லாத ஏக்கத்தில் பேராசிரியர் தற்கொலை கடற்கரையில் பிணமாக கிடந்தார்


குழந்தை இல்லாத ஏக்கத்தில் பேராசிரியர் தற்கொலை கடற்கரையில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 8 Feb 2018 1:29 AM GMT (Updated: 8 Feb 2018 1:29 AM GMT)

நாகர்கோவில் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பேராசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கடற்கரையில் பிணமாக கிடந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலகிருஷ்ணன்புதூர்,

சென்னை தாம்பரம் அஸ்த்தனாபுரத்தை சேர்ந்தவர் விவேக்குமார் (வயது 39). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவருக்கும், நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்த சுபாஷினி(29) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

விவேக்குமார் விடுமுறையில் மனைவியின் ஊரான மேலகிருஷ்ணன்புதூருக்கு வந்திருந்தார். அவர் குழந்தை இல்லையே என மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. விவேக்குமார் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை நாகர்கோவில் அருகே உள்ள சங்குத்துறை கடற்கரையில் விஷம் குடித்து ஒருவர் இறந்து கிடப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சலீம் ஆகியோர் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். இறந்தவர் உடலை பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், கடற்கரையில் இறந்து கிடந்தது பேராசிரியர் விவேக்குமார் என்பதும், குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.


Next Story