வேப்பூர் அருகே விபத்து; பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி


வேப்பூர் அருகே விபத்து; பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 8 Feb 2018 3:01 AM GMT (Updated: 8 Feb 2018 3:01 AM GMT)

வேப்பூர் அருகே பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வேப்பூர்,

விருத்தாசலம் அருகே உள்ள கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 24). என்ஜினீயர். இவரது உறவினர் ஆசை என்கிற ஆசைத்தம்பி (20). இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வேப்பூர் அருகே ஐவதுகுடியில் உள்ள ஒருவரிடம் கேமரா ஒன்றை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அங்கு கேமரா வாங்கிவிட்டு அதே மோட்டார் சைக்கிளில் அவர்கள் ஊர் திரும்பினர். இரவு 10 மணி அளவில் மேமாத்தூர் அணைக்கட்டு அருகே வந்த போது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த சந்தோஷ், ஆசைத்தம்பி ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று, சந்தோஷ், ஆசைத் தம்பி ஆகியோரின் உடலை பார்த்து கதறி அழுதனர். விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story