மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடைகளை உடனே காலி செய்யுமாறு உத்தரவு


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடைகளை உடனே காலி செய்யுமாறு உத்தரவு
x
தினத்தந்தி 8 Feb 2018 3:30 AM GMT (Updated: 8 Feb 2018 3:02 AM GMT)

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை தொடர்ந்து, அங்கிருந்த கடைகளை உடனே காலி செய்யுமாறு கோவில் நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி இரவு சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபத்தில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்குள்ள கடைகள் எரிந்து நாசமாயின. மேலும் வீரவசந்தராயர் மண்டபத்தின் இருபுறங்களில் உள்ள மேற்கூரைகள் இடிந்து, தூண்களில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் அந்த மண்டபத்தின் அருகே உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

கோவிலுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆராய, 12 பேர் கொண்ட வல்லுநர் குழு நேற்று முன்தினம் அமைக்கப்பட்டது. அதன் தலைவரும் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை என்ஜினீயருமான பாலசுப்பிரமணியன் நேற்று காலை கோவிலுக்கு வந்தார். அவர் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டார்.

இந்த நிலையில், கோவில் நிர்வாகம் கடைகளால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்பதால், அங்குள்ள கடைகளை காலி செய்யுமாறு நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக, கடைக்காரர்களிடம் கோவில் ஊழியர்கள் ஒரு கடிதம் ஒன்று கொடுத்தனர். அந்த கடிதத்தில் வாடகை ரசீதின்படி வாடகைதாரர் பெயர், கடை எண், கடை இருக்கும் இடம், தற்போது கடை நடத்தி வருபவர், கோவில் பதிவேட்டின்படி கடையில் உள்ள நபரின் ரத்த சம்பந்தப்பட்டவரா அல்லது மற்றவரா, வீட்டு முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் எழுதி இருந்தன.

கடைசியில், “மேற்காணும் கடையில் இருக்கிற பொருட்களை எனது சொந்த பொறுப்பில் எடுத்துச் செல்கிறேன். எனக்கு சொந்தமான பொருட்கள் வேறு எதுவும் கடையில் இல்லை. இதன் தொடர்ச்சியாக வருங்காலத்தில் எவ்வித உரிமையும் கோரமாட்டேன் என்ற விவரத்தை எனது சுயநினைவுடன் இக்கடிதம் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்“ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

கடிதம் கொடுத்த உடனே அதனை நிரப்பி, கையெழுத்து போட்டுத் தருமாறு கோவில் ஊழியர்கள், கடைக்காரர்களை வற்புறுத்தினர். அவ்வாறு கடிதத்தில் கையெழுத்து போட்டுக் கொடுக்கவில்லை என்றால், கோவில் நிர்வாகம் உடனே கடைகளை அனைத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி விடும் என்று கூறினர்.

இந்த கடிதத்தை அம்மன் சன்னதியில் உள்ள தேங்காய், வாழைப்பழக்கடை மற்றும் பூக்கடைக்காரர்களிடம் கொடுத்து, இனி மேல் கடைகளை திறக்கக் கூடாது என்று கூறினர். இன்று(வியாழக்கிழமை) காலை 11 மணிக்குள் கடிதத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்து கடைகளை உடனே காலி செய்து விட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இது குறித்து கோவில் கடைக்காரர்கள் சங்கத் தலைவர் ராஜநாகலு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2-ந்தேதி நடந்த சம்பவம் நாங்கள் கடையை அடைத்த பிறகு நடந்துள் ளது. நாங்கள் கடையில் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடக்க வாய்ப்பில்லை. இந்த விபத்தில் சேதம் அதிகம் ஏற்பட காரணம் தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் போதுமான அளவு இல்லாமல் இருந்தது தான். அந்த வண்டியில் தண்ணீர் அதிகமாக இருந்திருந்தால் தீயை வேறு இடங்களில் பரவ விடாமல் தடுத்து இருக்கலாம். மேலும் விபத்தில் 19 கடைகள் மட்டுமே முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. ஆனால் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்கக் கூடாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாங்கள் 4 தலைமுறையாக இங்கு கடை வைத்துள்ளோம். 1932-ம் ஆண்டு வாடகை செலுத்திய ரசீது கூட இன்னும் எங்களிடம் உள்ளது.

சூடம் ஏற்றியது தீ விபத்திற்கு காரணம் இல்லை. இந்த தீ விபத்திற்கு காரணம் மின்சார வயர் தான். ஏன் என்றால் இங்குள்ள மின் சம்பந்தமான பழுதுகள் அனைத்தையும் கோவில் நிர்வாகம் தான் சரி செய்யும். நாங்கள் இதுநாள் வரை மின்சாரம் தொடர்பாக எவ்வித வேலையும் செய்ய முடியாது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரங்கால் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே நாங்கள் விரைந்து செயல்பட்டு அந்த தீயை அணைத்தோம். அப்போது இருந்த இணை கமிஷனர் எங்களால் தான் புதுமண்டபம் காப்பாற்றப்பட்டது என்று பாராட்டினார்.

கோவிலில் வேறு மதத்தினர் யாருக்கும் கடை இல்லை. எங்கள் கடைகளை அனைத்தையும் உடனே காலி செய்யுமாறு கூறினார்கள். அப்படி காலி செய்யவில்லை என்றால் வீட்டில் வந்து நோட்டீஸ் ஒட்டுவதாக தெரிவித்தனர். இது குறித்து கேட்ட போது வியாழக்கிழமை (அதாவது இன்று) காலை 11 மணிக்குள் காலி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

நாங்கள் கடைகளை காலி செய்து விடுகிறோம். ஆனால் அரசு எங்களுக்கு மாற்று இடத்தை உருவாக்கித் தந்த பிறகு, இங்கிருந்து காலி செய்கிறோம். உடனே காலி செய்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நடுரோட்டில் தவிக்கும் நிலை ஏற்படும். எனவே அரசும், கோவில் நிர்வாகமும் எங்களுக்கு மாற்று இடத்தில் கடைகளை கட்டித் தந்த பிறகு தான் காலி செய்வோம்.

அது வரை கோவிலில் இருந்து நாங்கள் கடைகளை காலி செய்ய மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story