கொளத்தூர் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற வாலிபர் மர்மச்சாவு


கொளத்தூர் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற வாலிபர் மர்மச்சாவு
x
தினத்தந்தி 8 Feb 2018 4:47 AM GMT (Updated: 8 Feb 2018 4:47 AM GMT)

கொளத்தூர் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவரை அடித்துக்கொன்றதாக கூறி அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்குன்றம்,

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஜோதி என்ற பென்னியன் பிரபு(வயது 26). தந்தையை இழந்த இவர், தாயார் பிரபாவுடன் வசித்து வந்தார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தாயார் பிரபாவும் இறந்து விட்டார். தாய் இறந்த சோகம் தாங்க முடியாமல் ஜோதி குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

இதனால் அவரை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 3-வது தெருவில் வசித்து வரும் அவருடைய தங்கை பாரதி, தனது வீட்டில் வைத்து கவனித்து வந்தார். ஆனால் அங்கேயும் அவர் குடிப்பழக்கத்தை தொடர்ந்து வந்தார்.

எனவே தனது அண்ணன் குடிப்பழக்கத்தை மறக்க வேண்டும் என்பதற்காக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கொளத்தூர் அருகே உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஜோதியை சிகிச்சைக்காக சேர்த்து விட்டார். இதற்காக மாதம் ரூ.10 ஆயிரத்தை கட்டணமாக செலுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் போதை மறுவாழ்வு மையத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் 3 பேர், ஒரு காரில் ஜோதியை அவருடைய தங்கை பாரதி வீட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது மிகவும் சோர்வாக காணப்பட்ட ஜோதி, தங்கை வீட்டுக்கு வந்து இறங்கியதும் திடீரென மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சி அடைந்த பாரதி, போதை மறுவாழ்வு மைய ஊழியர்களிடம் அதே காரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜோதியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு ஜோதியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அண்ணனின் உடலை பார்த்து பாரதி கதறி அழுதார்.

இறப்பதற்கு முன்னால் ஜோதி தனது தங்கை பாரதி மற்றும் உறவினர்களிடம், போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் செல்வக்குமார் மற்றும் அங்கு பணி செய்யும் 3 ஊழியர்கள் கடந்த 2 மாதங்களாக கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். சாப்பாடு தராமல் துன்புறுத்தினர் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாரதி மற்றும் அவரது உறவினர்கள் நேற்று காலை மாதவரம் பால்பண்ணை போலீசில் இதுபற்றி புகார் கொடுக்க சென்றனர். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டதால் 25-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாதவரம் துணை கமிஷனர் கலைசெல்வம், உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியன் மற்றும் போலீசார், முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ஜோதியை போதை மறுவாழ்வு மையத்தில் வைத்து அடித்துக்கொலை செய்து உள்ளனர். அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து பலியான ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு ஜோதி அடித்துக்கொலை செய்யப்பட்டது உண்மையானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதை ஏற்று முற்றுகையை கைவிட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story