மானூர் அருகே, போலீஸ் சோதனையின்போது விபத்து: கணவருடன் மொபட்டில் வந்த பெண் கீழே விழுந்து சாவு


மானூர் அருகே, போலீஸ் சோதனையின்போது விபத்து: கணவருடன் மொபட்டில் வந்த பெண் கீழே விழுந்து சாவு
x
தினத்தந்தி 8 Feb 2018 8:30 PM GMT (Updated: 8 Feb 2018 6:26 PM GMT)

மானூர் அருகே கணவருடன் மொபட்டில் வந்த பெண் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

மானூர்,

மானூர் அருகே கணவருடன் மொபட்டில் வந்த பெண் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். போலீஸ் சோதனை நடத்தியதை பார்த்ததும் மொபட்டை நிறுத்த முயன்றபோது இந்த துயரம் நேர்ந்தது.

மொபட்டில் கணவருடன் வந்த பெண்


மானூர் அருகே உள்ள ராமையன்பட்டி போலீஸ் காலனி எதிர்புறம் உள்ள ராம்நகரை சேர்ந்தவர் மைதீன் (வயது 28). இவருடைய மனைவி கோதர் பாத்து (25). இவர்கள் இருவரும் கடந்த 4–ந்தேதி ஒரு மொபட்டில் நெல்லை–சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.

ராமையன்பட்டி குப்பைக்கிடங்கு அருகே உள்ள பாலம் அருகில் வந்தபோது அங்கு போலீசார் வாகன சோதனை செய்வதை மைதீன் பார்த்தார். அவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததால், போலீசார் வழக்கு போட்டுவிடுவார்கள் என பயந்து மொபட்டை திடீரென நிறுத்த முயன்றார்.

பரிதாப சாவு


அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து கோதர் பாத்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கோதர் பாத்து நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் வாகன சோதனையின்போது மொபட்டில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story