தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அணிவகுப்பில் பரபரப்பு: தொண்டர்கள்–போலீசார் பயங்கர மோதல்; தடியடி சிறுவன் உள்பட 6 பேர் படுகாயம்


தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அணிவகுப்பில் பரபரப்பு: தொண்டர்கள்–போலீசார் பயங்கர மோதல்; தடியடி சிறுவன் உள்பட 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Feb 2018 9:30 PM GMT (Updated: 20 Feb 2018 2:42 PM GMT)

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அணிவகுப்பில் தொண்டர்கள்– போலீசார் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அணிவகுப்பில் தொண்டர்கள்– போலீசார் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் சிறுவன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு தூத்துக்குடியில் கடந்த 17–ந் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.

மாநாடு நிறைவு நாளான நேற்று கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார். மாநாட்டில் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அணிவகுப்பு

இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரின் செந்தொண்டர் அணிவகுப்பு நேற்று மாலை நடந்தது. தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கிய அணிவகுப்புக்கு வரவேற்புக்குழு தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு கொடியசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பில் மாநிலம் முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிவப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

வாக்குவாதம்

அணிவகுப்பு பாளையங்கோட்டை ரோடு, அண்ணாநகர், எட்டயபுரம் ரோடு வழியாக பொதுக்கூட்ட திடலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அண்ணாநகர் 7–வது தெரு விலக்கு அருகில் அணிவகுப்பு வந்த போது, ஒருநபர் மோட்டார் சைக்கிளில் அந்த அணிவகுப்பை கடக்க முயன்றார்.

அவரை கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த மோட்டார் சைக்கிளை அணிவகுப்பை கடந்து செல்ல அனுமதிக்குமாறு தொண்டர்களிடம் கூறினர். அப்போது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தடியடி

வாக்குவாதம் முற்றியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த போலீசார், அந்த பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கம்புகளை எடுத்து தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் போலீசார் தாக்கியதில் மதுரையை சேர்ந்த சேதுராம் மகன் சோலை பெருமாள் (வயது 34), திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் விமல் (23), திண்டுக்கல்லை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விஷ்ணுவர்த்தன் (30), திருப்பூரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் அகிலேஷ் (5) ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

2 போலீசார் காயம்

இதேபோன்று தொண்டர்கள் தாக்கியதில், தென்பாகம் போலீஸ் ஏட்டு சேகர், ஆயுதப்படை போலீஸ்காரர் ராம்சுந்தர் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 2 போலீஸ்காரர்கள் உள்பட 4 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், சிறுவன் உள்பட 2 பேர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே தொண்டர்களில் சிலர், போலீஸ் வாகனம் மீது கல் மற்றும் கம்புகளை வீசி தாக்கினர். அதன்பின்னர் அவர்கள் அண்ணா நகர் மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு


இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மறியலில் ஈடுபட்ட தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் ½ மணி நேரத்துக்கு பிறகு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அணிவகுப்பு மீண்டும் தொடங்கி நடந்து முடிந்தது.

இதற்கிடையே மாநாடு நடைபெறும் திருமண மண்டபம் அருகில் எட்டயபுரம் ரோட்டில் தொண்டர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு கட்சி நிர்வாகிகள் அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த மோதல் சம்பவம் தூத்துக்குடியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story