மகிழ்ச்சியான பஸ் டிரைவர்


மகிழ்ச்சியான பஸ் டிரைவர்
x
தினத்தந்தி 25 Feb 2018 7:14 AM GMT (Updated: 25 Feb 2018 7:14 AM GMT)

கொல்கத்தாவின் முதல் பெண் பஸ் டிரைவராக விளங்குகிறார், பிரதிமா. 42 வயதான இவர் 6 ஆண்டுகளாக மினி பஸ் ஓட்டி வருகிறார்.

கொல்கத்தாவின் முதல் பெண் பஸ் டிரைவராக விளங்குகிறார், பிரதிமா. 42 வயதான இவர் 6 ஆண்டுகளாக மினி பஸ் ஓட்டி வருகிறார். இதுவரை விபத்து எதுவும் ஏற்படுத்தாத டிரைவர் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார். ஆரம்பத்தில் பிரதிமா பஸ் கண்டக்டராகத்தான் பணி புரிந்திருக்கிறார். இவருடைய கணவர் ஷிவேஸ்வர் பஸ் டிரைவராக இருந்தவர்.

கணவர் 2011-ம் ஆண்டு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, ஓட்டுனராக தொடரும் தகுதியை இழந்துவிட்டார். அப்போது பிரதிமா மகள்களின் படிப்பு செலவை சமாளிப்பதற்காக டிரைவர் பயிற்சி பெற்றவர் தற்போது சொந்தமாக மினி பஸ் வாங்கி இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த பஸ்சில் அவருடைய கணவர் கண்டக்டராக இருக்கிறார். கணவன்-மனைவி இருவரும் பஸ்சை நிர்வகித்து, குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்புள்ள குடும்ப தலைவன்-தலைவிகளாக வலம் வருகிறார்கள்.

‘‘எனக்கு வாகனம் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். ஆனால் அதுவே என் முழுநேர தொழிலாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் கணவர் ஓட்டிச்சென்ற பஸ் மீது எதிரே வந்த பஸ் மோதியதில் அவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இனி அவரால் பஸ் ஓட்டமுடியாது என்று கூறிவிட்டார்கள். அப்போது என் குழந்தைகளின் படிப்பு செலவை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டேன். பல இடங்களில் வேலைக்கு முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் எதுவும் எனக்கு சவுகரியமானதாக அமையவில்லை.

கணவரை போல் டிரைவிங் தொழில்தான் எனக்கு சவுகரியமாக தோன்றியது. ஏற்கனவே டிரைவிங் பயிற்சி பெற்ற அனுபவத்தில் சில வாரங்கள் ஆம்புலன்ஸ், டாக்சி ஓட்டி பழகினேன். அப்போது என் கணவர் ஓரளவு உடல் நலம் தேறியதால் அவர் ஓட்டுனர் பயிற்சி வழங்கினார். அதனால் முறைப்படி பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் வாங்கினேன். சொந்தமாக பஸ் வாங்கி ஓட்டலாம் என்று உறவினர்கள் சொன்னார்கள். எனக்கும் அதுதான் சரியாக தோன்றியது. நிம்டாவில் இருந்து ஹவுரா வரை மினிபஸ்சை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

என் கணவர் கண்டக்டராக இருப்பதால் பயணிகள் ஏறுவது, இறங்குவதை கண்காணித்து ஓட்டு வதற்கு சுலபமாக இருக்கிறது. என்னை பார்ப்பவர்கள், ‘பெண்கள் பஸ் ஓட்டுவதில் என்னென்ன சிரமங்களெல்லாம் இருக்கிறது’ என்று கேட்பார்கள். பிரச்சினைகள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கின்றன. அதனை எப்படி சமாளிப்பது என்பதை கற்றுக்கொண்டால் எதுவுமே கடினமாக தெரியாது. நான் மற்ற ஆண்களை விட வேகமாகவும் பாதுகாப்பாகவும் ஓட்டுவேன். இதுவரை விபத்து எதுவும் ஏற்படுத்தியதில்லை என்று மற்றவர்கள் சொல்வதை கேட்பதற்கு பெருமையாக இருக்கிறது. போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்து அதிகாரிகள், மற்ற ஆண் டிரைவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்’’ என் கிறார்.

பிரதிமா அதிகாலையில் 3.30 மணி முதல் பஸ் ஓட்ட தொடங்கி விடுகிறார். இவருடைய மூத்த மகள் ராஹே கல்லூரி படிப்பும், இளைய மகள் சாதே ஒன்பதாம் வகுப்பும் படிக்கிறார்கள். பிரதிமா, குடும்ப சூழ்நிலையால் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டவர். அதனால் மகள்கள் இரு வருடைய படிப்பிலும் தீவிர கவனம் செலுத்து கிறார்.. "பஸ் மூலம் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதி பஸ் வாங்கியதற்கான மாத தவணை கடனை செலுத்துவதற்கும், பிள்ளைகளின் படிப்புக்கும் செலவாகிவிடுகிறது. ஆனாலும் மகிழ்ச்சி யாக வாழ்கிறேன்" என்கிறார்.

Next Story