மக்கள் நீதி மய்யம் சமுதாய நலனுக்கு போராடும்: பாடலாசிரியர் சினேகன் பேட்டி


மக்கள் நீதி மய்யம் சமுதாய நலனுக்கு போராடும்: பாடலாசிரியர் சினேகன் பேட்டி
x
தினத்தந்தி 25 Feb 2018 10:15 PM GMT (Updated: 25 Feb 2018 8:15 PM GMT)

சமுதாய நலனுக்காக மக்கள் நீதி மய்யம் போராடும் என்று பாடலாசிரியர் சினேகன் கூறினார்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி வந்த பாடலாசிரியர் சினேகன் 58 கிராம பாசன விவசாயிகளை சந்தித்தார். இதனைதொடர்ந்து அவர்நிருபர்களிடம் கூறியதாவது:-

கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி சமுதாய நலனுக்காக போராடும். குறிப்பாக விவசாய தொழிலை வளர்ச்சி அடைய செய்ய எல்லா முயற்சிகளையும் எடுக்கும். உசிலம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 58 கிராம கால்வாய்த் திட்டத்தை அரசு உடனடியாக முடித்து வறண்டு கிடக்கும் இந்த பூமியை செழுமையடைய செய்ய அரசு முன்வரவேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து உசிலம்பட்டி பொன்மணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- கல்வி உலகத்தை தரும். உலகம் வாழ்க்கையைத் தரும். ஆனால் அதில் நாம் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும், எனவே கல்வியுடன் கூடிய கலைகளை மாணவ பருவத்தில் கற்றுக்கொள்ள வேண்டும் அப்படி செய்தால் தான் நமது பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுடன் வாழ்க்கைக்கும் இது உதவியாக இருக்கும். நம் நாட்டில் கலைகள் ஏராளமாக உள்ளன. அதைக் கற்றுக்கொடுப்பவர்கள் தான் குறைந்து கொண்டு வருகிறார்கள்.

நமது கலை மற்றும் பண்பாட்டை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கலைகளை அழியவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காரணம் கல்வி உலகத்தோடு உறவாட கற்றுக் கொடுக்கும். ஆனால் கலை வாழ்க்கையை கற்றுக் கொடுக்கும் இவ்வாறு அவர் பேசினார்.

விழாவிற்கு பள்ளி தாளாளர் ராணி தலைமை தாங்கினார். முதல்வர் ஜோசப் கார்த்திக் ஆண்டறிக்கை சமர்பித்தார், பள்ளி நிர்வாக ஒருங்கிணைப்பாளர் கீர்த்தி வரவேற்றுப் பேசினார். டி.இ.எல்.சி சபை குரு யோபு ஞானைய்யா விழாவினை தொடங்கி வைத்தார். உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உத்தப்பநாயக்கனூர் வில்பப்பள்ளி முதல்வர் ராஜமோகன் நன்றி கூறினார்.

Next Story