தூத்துக்குடியில், எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள்களுக்கு பாதுகாப்புக்காக சென்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு


தூத்துக்குடியில், எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள்களுக்கு பாதுகாப்புக்காக சென்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 March 2018 8:30 PM GMT (Updated: 9 March 2018 3:30 PM GMT)

தூத்துக்குடியில் எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள்களுக்கு பாதுகாப்புக்காக சென்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள்களுக்கு பாதுகாப்புக்காக சென்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வினாத்தாள் காப்பகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 16–ந்தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்குகிறது. இதற்கான வினாத்தாள் நேற்று மதியம் தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், புதுக்கோட்டை, சாத்தான்குளம் ஆகிய 6 இடங்களில் இருக்கும் வினாத்தாள் காப்பகங்களுக்கு வினாத்தாள்கள் பிரித்து அனுப்பப்பட்டன.

இந்த வினாத்தாள்களை வேனில் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக, தூத்துக்குடி ஆயுதப்படையை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் 6 பேர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 5 வினாத்தாள் காப்பகத்துக்கு வினாத்தாள் கட்டுகளை ஏற்றிக் கொண்டு தலா ஒரு போலீஸ்காரர் வீதம் சென்று விட்டனர்.

துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

தூத்துக்குடி வினாத்தாள் காப்பகம் சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலேயே அமைந்து உள்ளதால், உடனடியாக வினாத்தாள்கள் காப்பகத்துக்குள் வைக்கப்பட்டன. இந்த பணிக்கு பாதுகாப்புக்காக தூத்துக்குடி ஆயுதப்படையை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் (வயது 27) என்பவர் வந்து இருந்தார்.

வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட பிறகு, அதற்கான ஒப்புதல் கடிதம் பெறுவதற்காக ஆனந்தகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள வேப்பமரத்தின் கீழ் அமர்ந்து இருந்தார். அப்போது, தான் வைத்து இருந்த துப்பாக்கியின் விசையை(டிரிக்கர்) எதிர்பாராதவிதமாக அழுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி சுட்டத்தில் குண்டு வானத்தை நோக்கி பாய்ந்தது. இதனால் பள்ளிக்கூடத்தில் இருந்த ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், தூத்துக்குடி ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், இன்ஸ்பெக்டர் அய்யம்பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், போலீஸ்காரர் ஆனந்தகிருஷ்ணன் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 2013–ம் ஆண்டு போலீசில் சேர்ந்து உள்ளார். நேற்று வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்புக்காக வந்தார். அப்போது, ஆயுதப்படையில் இருந்து இன்சாஸ் வகை துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் வாங்கி வந்து உள்ளார். அதில் ஒரு தோட்டா மட்டும் துப்பாக்கியில் பொருத்தி வைத்து இருந்தார். அப்போது சரிவர டிரிக்கர் லாக் செய்யப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக கை பட்டதால் துப்பாக்கி சுட்டு குண்டு வெடித்தது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story