விளையாடிக்கொண்டு இருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு


விளையாடிக்கொண்டு இருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 4 May 2018 10:15 PM GMT (Updated: 4 May 2018 8:17 PM GMT)

விளையாடிக்கொண்டு இருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர்- சத்தி ரோடு குட்டைப்புதூர் இந்திரநகரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் அன்னூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தாமணி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் மனோஜ் (வயது 9). இவன் அன்னூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். சோமசுந்தரம், சாந்தாமணி ஆகியோர் நேற்றுவழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். சோமசுந்தரம் வசித்து வந்த வீட்டின் பக்கத்து தெருவில் வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக அங்கு 6 அடி ஆழத்தில் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு வந்தது. அந்த தண்ணீர் தொட்டி தரையோடு தரையாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக அந்த தொட்டியில் தண்ணீர் நிரம்பியது. மேலும் அதில் சாக்கடை நீரும் கலந்து இருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று காலையில் சிறுவன் மனோஜ் அந்த தொட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக மனோஜ் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தான். இதனால் அவன் தண்ணீரில் தத்தளித்தபடி அலறினான். அவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுவன் மனோஜை மீட்டு சிகிச்சைக்காக அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்த மனோஜின் உடலை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, தண்ணீர் தொட்டியில் சாக்கடை நீர் கலந்து இருந்தது. இதனால் தான் தண்ணீர் தொட்டி இருந்தது தெரியாமல் சிறுவன் தவறி விழுந்து இறந்துள்ளான். எனவே இந்த பகுதியில் சாக்கடை நீர் செல்ல போதிய வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அன்னூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் முகமது முசீர் தலைமை தாங்கினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அன்னூர் பேரூராட்சி அலுவலர் தனசேகர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story