திருமணமான 6-வது நாளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான 6-வது நாளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2018 10:00 PM GMT (Updated: 4 May 2018 9:30 PM GMT)

கச்சிராயப்பாளையம் அருகே திருமணமான 6-வது நாளில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரும் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கச்சிராயப்பாளையம்,

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் பரமேஸ்வரி(வயது 23). வடக்கனந்தல் கிராமம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சின்னதுரை மகன் வெற்றிவேல்(25). இவர்கள் இருவருக்கும் கடந்த 29-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.

திருமண வாழ்க்கையில் இணைந்த இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் பரமேஸ்வரி தனது கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து பரமேஸ்வரியை அவரது பெற்றோர் சமாதானம் செய்து, நேற்று முன்தினம் வெற்றிவேலின் வீட்டில் கொண்டு வந்து விட்டனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த, பரமேஸ்வரி புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குள் வந்த வெற்றிவேல் , தனது மனைவி பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஓடி வந்து, பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இத்றகிடையே மனைவியை பிரிந்த சோகத்தில், வெற்றிவேலும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்தார். அங்குள்ள அறைக்குள் சென்ற அவர், விஷத்தை குடித்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த கச்சிராயப்பாளையம் போலீசார் விரைந்து வந்து, பரமேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பரமேஸ்வரியின் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6-வது நாளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story