ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 5 May 2018 10:30 PM GMT (Updated: 5 May 2018 9:13 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 3.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, 3.45 மணிக்கு கொடிமர மண்டபம் வந்தார். பின்னர் காலை 4.45 மணி முதல் 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து காலை 6.15 மணிக்கு நம் பெருமாள் கொடி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். பின்னர் மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு நம் பெருமாள் உப நாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் வழியாக உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

தேரோட்டம்

விழாவின் 2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கற்பக விருஷ வாகனத்திலும், 7-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 8-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 9-ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 10-ந் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

11-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 12-ந் தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

Next Story