போலீஸ் ஏட்டு கொலை வழக்கு: நெல்லை கோர்ட்டில் வாலிபர் சரண்


போலீஸ் ஏட்டு கொலை வழக்கு: நெல்லை கோர்ட்டில் வாலிபர் சரண்
x
தினத்தந்தி 10 May 2018 9:15 PM GMT (Updated: 10 May 2018 7:09 PM GMT)

நெல்லை அருகே போலீஸ் ஏட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வாலிபர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

நெல்லை, 

நெல்லை அருகே போலீஸ் ஏட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வாலிபர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

போலீஸ் ஏட்டு கொலை

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் ஜெகதீஷ் துரை. இவர் மணல் கடத்தல் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏற்கனவே 5 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய தாமரைகுளத்தை சேர்ந்த முருகன், ராதாபுரம் தாலுகா கல்மாணிக்கபுரத்தை சேர்ந்த அமிதாபச்சன் (வயது 27), தங்கவேலு (30) ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வந்தனர்.

கோர்ட்டில் சரண்

இந்த நிலையில், அமிதாபச்சன் நேற்று நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ராம்தாஸ் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைத்து வருகிற 14-ந்தேதி நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அமிதாபச்சனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இதற்கிடையே, இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முருகன் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அவரை பிடிக்க அங்கு விரைந்தனர். அவர்கள் தொடர்ந்து அங்கு முகாமிட்டு முருகனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story