பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த 17 கொத்தடிமைகள் மீட்பு


பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த 17 கொத்தடிமைகள் மீட்பு
x
தினத்தந்தி 11 May 2018 9:45 PM GMT (Updated: 11 May 2018 8:46 PM GMT)

பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த கொத்தடிமைகள் 17 பேரை சப்–கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மீட்டார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா திருவதிகை அருகே உள்ள ராசாப்பாளையத்தில் சீனிவாச செட்டியார் என்பவருடைய கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 17 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக பண்ருட்டி தாசில்தார் பூபாலசந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதுபற்றி சப்–கலெக்டர் ஜானிடாம் வர்கீசுக்கு தாசில்தார் பூபாலசந்திரன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்–கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் வெங்கடேசன், தொழிலாளர் ஆய்வாளர்கள் ஜெரால்டு, ஷார்லி உள்ளிட்டோர் ராசாப்பாளையத்துக்கு சென்றனர்.

அப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் சிலர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு கொத்தடிமைகளாக இருந்த லட்சுமி, அவரது கணவர் வெங்கடேசன் உள்பட 17 பேரை மீட்டு கடலூருக்கு அழைத்து வந்தனர். அதில் 6 பெண் குழந்தைகளும், 5 ஆண் குழந்தைகளும் உள்ளனர். அந்த 11 குழந்தைகளை குழந்தைகள் நலகுழும தலைவி ஜெயந்தி ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். அந்த குழந்தைகளில் ஆண்குழந்தைகளை செம்மண்டலம் காந்தி நகரில் உள்ள ஆண்குழந்தைகள் காப்பகத்திலும், பெண் குழந்தைகளை வன்னியர் பாளையம் காமராஜர் நகரில் உள்ள காப்பகத்திலும் ஒப்படைத்தனர்.

இந்த 17 பேரும் விழுப்புரம் மாவட்டம் முருக்கேரி அருகே உள்ள முத்தாம்பாளையத்தை சேர்ந்தவர்கள். கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் கொத்தடிமைகளாக வேலை பார்த்து உள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் சீனிவாச செட்டியார் மற்றும் இவர்களை மேற்பார்வை பார்த்து வந்த செந்தில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட லட்சுமி கூறியதாவது:–

நாங்கள் முத்தாம்பாளையத்தை சேர்ந்தவர்கள். ராசாப்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவர் தான் எங்களை கரும்பு தோட்டத்துக்கு வேலைக்கு அழைத்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்கிறோம். ராசாப்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் கரும்பு வெட்டு முடிந்தால், வெளியூர்களுக்கும், ஓசூர், ஆந்திரா போன்ற இடங்களுக்கும் கரும்பு வெட்டுவதற்காக எங்களை அழைத்துச்செல்வார். எங்களுக்கு கூலி எதுவும் தருவதில்லை. செலவுக்கு காசும், அரிசியும் தான் கொடுப்பார்கள். எங்கள் குழந்தைகளையும் வேலை வாங்குவார்கள். இதனால் மிகவும் கஷ்டப்பட்டோம். எங்களை மீட்டதற்காக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்

இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி குழந்தைகள் நலக்குழும தலைவி ஜெயந்திரவிச்சந்திரன் கூறியதாவது:–

மீட்கப்பட்ட குழந்தைகளின் வயது தெரியவில்லை. அதனால் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி உள்ளோம். அவர்களின் வயதை கண்டறிந்த பின்பு, பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மேலும் அவர்களின் பெற்றோரின் வாழ்க்கை ஆதாரத்துக்கும் அரசு மூலம் உரிய உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்


Next Story