சென்னை சுற்றுவட்ட சாலை திட்டத்திற்கான நில எடுப்பு இழப்பீட்டு கலந்தாய்வு கூட்டம்


சென்னை சுற்றுவட்ட சாலை திட்டத்திற்கான நில எடுப்பு இழப்பீட்டு கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 11 May 2018 9:43 PM GMT (Updated: 11 May 2018 9:43 PM GMT)

சென்னை சுற்றுவட்ட சாலை திட்டத்திற்கான நில எடுப்பு இழப்பீட்டு கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு சாலை வளர்ச்சி கழக திட்ட மேலாளர் ரங்கராஜன் தலைமையில் நடந்தது.

மீஞ்சூர், 

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சென்னை சுற்று வட்ட சாலை திட்டத்திற்கான நில எடுப்பு பாதிப்புகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் கொள்கை பற்றி பொதுமக்களிடம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு சாலை வளர்ச்சி கழகத்தின் திட்ட மேலாளர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். வடிவமைப்பு பொறியாளர் கோபி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஆண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை வடிவமைப்பாளர் குழு உறுப்பினர் வெஸ்லி அனைவரையும் வரவேற்றார்.

சமூக வளர்ச்சி அலுவலர் விஜயா வெங்கடேஷ் சாலை பணி மேற்கொள்ளும் போது ஏற்படும் இழப்பீடு குறித்து விளக்க உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நெடுஞ்சாலைத்துறை மூலம் சென்னை சுற்றுவட்ட சாலை திட்டம் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து, தச்சூர், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள்கோவில், மாமல்லபுரம் வரை 134 கிலோ மீட்டர் தூரத்திற்கு 100 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. முக்கிய சந்திப்புகளில் 9 சாலை மேம்பாலங்கள் 2 ரெயில்வே மேம்பாலங்களும் பக்கிங்காம் கால்வாய் மற்றும் எண்ணூர் கடற்கழியில் 2.60 கிலோமீட்டர் நிளத்திற்கு பாலமும், சிறு கால்வாய்களை கடக்க 47 குறும்பாலங்கள் அமைத்து ரூ.2,750 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தபட உள்ளது.

பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு

இந்த நிலையில் பொன்னேரி வட்டத்தில் காட்டுப்பள்ளி, நெய்தவாயல், கல்பாக்கம், நாலூர், அனுப்பம்பட்டு, தச்சூர், ஜெகநாதபுரம், கொள்ளட்டி, நந்தியம்பாக்கம் உள்பட 15 கிராமங்களின் வழியாக செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கக்கூடியவர்களுக்கு நெடுஞ்சாலை துறை மாற்று குடியமர்வு கொள்கை கட்டமைப்பு திட்டம் தயாரித்து வருவதாகவும் இன வாரியான ஒப்பந்த முறை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். சாலை அமைக்கும் பணிகளால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வரையறுக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் விதிகளின்படி இழப்பீடுகள் அதற்கான தகுதிகள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மீஞ்சூர் ஆணையாளர் வேதநாயகம், மறுமதிப்பீடு சிறப்பு அலுவலர் பாண்டியன், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story