வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. முனிரத்னா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய அனுமதி


வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. முனிரத்னா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய அனுமதி
x
தினத்தந்தி 11 May 2018 10:15 PM GMT (Updated: 11 May 2018 10:08 PM GMT)

வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான முனிரத்னா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு, 

வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான முனிரத்னா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் தள்ளிவைப்பு

பெங்களூரு ஜாலஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் கடந்த 8-ந் தேதி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள், வாக்குச்சீட்டுகள், காங்கிரஸ் கட்சியின் கொடிகள், பிரிண்டர்கள், மடிக்கணினிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அந்த வாக்காளர் அடையாள அட்டைகள் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், தற்போது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முனிரத்னாவின் ஆதரவாளர்கள் தான் வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கி வைத்திருந்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முனிரத்னா உள்பட 14 பேர் மீது ஏற்கனவே ஜாலஹள்ளி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து, அந்த தொகுதிக்கு நடைபெற இருந்த தேர்தலை தள்ளிவைத்து நேற்று மாலையில் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய அனுமதி

இதற்கிடையில், வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கிய விவகாரம் தொடர்பாக முனிரத்னா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி ராஜேஷ் என்பவர் பெங்களூரு 24-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. முனிரத்னா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதனால் அவர் மீது எப்போது வேண்டுமானாலும் போலீசார் வழக்குப்பதிவு செய்யலாம் என்றும், மேலும் அவரை கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் அரசியலில், முனிரத்னா எம்.எல்.ஏ.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Next Story