சுரண்டையில் பரிதாபம் தாய் இறந்த துக்கத்தில் மகனும் சாவு அன்னையர் தினத்தன்று ஒரே இடத்தில் அடக்கம்


சுரண்டையில் பரிதாபம் தாய் இறந்த துக்கத்தில் மகனும் சாவு அன்னையர் தினத்தன்று ஒரே இடத்தில் அடக்கம்
x
தினத்தந்தி 13 May 2018 9:30 PM GMT (Updated: 13 May 2018 6:44 PM GMT)

சுரண்டையில் தாய் இறந்த துக்கத்தில் மகனும் பரிதாபமாக இறந்தார். அன்னையர் தினத்தன்று ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

சுரண்டை, 

சுரண்டையில் தாய் இறந்த துக்கத்தில் மகனும் பரிதாபமாக இறந்தார். அன்னையர் தினத்தன்று ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

கப்பல் ஊழியர்

நெல்லை மாவட்டம் சுரண்டை ஆர்.சி. சர்ச் எதிரே வசித்து வந்தவர் கமலா மிஷியர் (வயது 69). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் தென்காசியிலும், 2-வது மகன் சுரண்டையிலும் ஓட்டல் நடத்தி வருகின்றனர். இவர்கள் சுரண்டையில் மீன் வியாபாரமும் செய்து வருகின்றனர். 3-வது மகன் குட்வின் (40). இவர் வெளிநாட்டில் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். குட்வின் கடைசி மகன் என்பதால் கமலா மிஷியர் அதிக பாசம் வைத்து இருந்தார். அதேபோன்று குட்வினும், தனது தாயாரிடம் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

தாயார் சாவு

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குட்வின் விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார். அப்போது கமலா மிஷியருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே தனது தாயாரை டாக்டரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். கமலா மிஷியருக்கு ஒரு ஸ்கேன் எடுக்க டாக்டர் பரிந்துரை செய்து இருந்தார்.

அதற்காக நேற்று முன்தினம் காலையில் நெல்லையில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்துக்கு குட்வின் தனது தாயாரை காரில் அழைத்துச் சென்றார். அங்கு ஸ்கேன் எடுத்த பிறகு ஊருக்கு புறப்பட இருவரும் தயாரானார்கள். அப்போது கமலா மிஷியர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குட்வின், அங்கிருந்த டாக்டர்களிடம் கூறினார். டாக்டர்கள் விரைந்து வந்து கமலா மிஷியரை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக கூறினர்.

துக்கத்தில் மகனும் சாவு

பின்னர் கமலா மிஷியர் உடல் அவர்கள் சென்ற காரிலேயே சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. தாயார் உடலை பார்த்து அழுதபடியே குட்வின் இருந்தார். ஊருக்கு வந்த பிறகும் அவரது அழுகை நின்றபாடில்லை. அவர் உடல் சோர்ந்து காணப்பட்டார். அப்படி இருந்தும் தாயை பிரிந்த துக்கத்தில் அழுகையை அவரால் நிறுத்த முடியவில்லை.

கமலா மிஷியர் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. திடீரென்று குட்வின் மயக்கம் போட்டு விழுந்தார். அங்கிருந்தவர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தனர். அப்படி இருந்தும் அவருக்கு மயக்கம் தெளியவில்லை. அவரை சுரண்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தாய் இறந்த துக்கம் தாங்காமல் குட்வின் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது தெரியவந்தது.

ஒரே இடத்தில் அடக்கம்

தாய் இறந்த துக்கத்தில் மகன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அந்த பகுதி மக்கள் மிகுந்த சோகத்துக்கு ஆளானார்கள். தாய்- மகன் இருவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது. தாய்- மகன் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன.

இறந்த குட்வினுக்கு திருமணம் முடிந்து பிரஸ்திகா என்ற மனைவியும், 3 வயதில் ரியான் என்ற மகனும், 2 வயதில் சியான்ஷியா என்ற மகளும் உள்ளனர். தாய்- மகன் இருவரது உடல்களும் அன்னையர் தினத்தன்று ஒரே இடத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் சுரண்டையில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story