பரேல் ரெயில் நிலையத்தில் புதிய பிளாட்பாரம் ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வரும் அதிகாரி தகவல்


பரேல் ரெயில் நிலையத்தில் புதிய பிளாட்பாரம் ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வரும் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 13 May 2018 10:32 PM GMT (Updated: 13 May 2018 10:32 PM GMT)

பரேல் ரெயில் நிலையத் தில் அமைக்கப்பட்டு உள்ள புதிய பிளாட்பாரம் ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரெயில்வே அதிகாரி கூறினார்.

மும்பை,

பரேல் ரெயில் நிலையத் தில் அமைக்கப்பட்டு உள்ள புதிய பிளாட்பாரம் ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரெயில்வே அதிகாரி கூறினார்.

பயணிகள் சிரமம்

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ளது பரேல் ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையத்திற்கு தினசரி சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த ரெயில் நிலையத்தில் 8 மீட்டர் அகலத்தில் ஒரே ஒரு பிளாட்பாரம் தான் உள்ளது.

சி.எஸ்.எம்.டி. நோக்கி செல்லும் மின்சார ரெயில்கள் பிளாட்பாரத்தின் கிழக்குப்பகுதியிலும், கல்யாண் நோக்கி செல்லும் ரெயில்கள் மேற்கு பகுதியிலும் நின்று செல்லும்.

ஒரே நேரத்தில் இரண்டு பக்கத்திலும் மின்சார ரெயில்கள் வந்து நிற்கும் போது, பிளாட்பாரத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. இதனால் பயணிகள் ெரயில் நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்குள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

புதிய பிளாட்பாரம்

இதையடுத்து பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, பரேல் ரெயில் நிலையத்தில் கல்யாண் நோக்கி செல்லும் வழித்தடத்தின் மேற்கு பகுதியில் புதிய பிளாட்பாரம் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் கல்யாண் நோக்கி செல்லும் மின்சார ரெயில் பரேல் ரெயில் நிலையத்தின் பழைய மற்றும் புதிய பிளாட்பாரங்களுக்கு மத்தியில் வந்து நிற்கும். எனவே பயணிகள் இரண்டு பிளாட்பாரங்களிலும் இறங்கி செல்ல முடியும்.

இதுபற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், பரேல் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பிளாட்பார பணிகள் ஏறக்குறைய முடிந்து விட்டன. பழைய பிளாட் பாரம் தற்போது உள்ள 8 மீட்டர் அகலத்தில் இருந்து மேலும் 2 மீட்டர் அதிகரிக்கப்படுகிறது.

எனவே தண்டவாளத் தையும் மாற்றி அமைக்க வேண்டி உள்ளது. இந்த பணிகள் எல்லாம் முடிந்து ஜூலை மாதம் புதிய பிளாட்பாரம் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

Next Story