பிளாட்பாரத்திற்கும், ரெயிலுக்கும் இடையே சிக்கிய சிறுமியை, உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய வீரர் உயர் அதிகாரிகள் பாராட்டு


பிளாட்பாரத்திற்கும், ரெயிலுக்கும் இடையே சிக்கிய சிறுமியை, உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய வீரர் உயர் அதிகாரிகள் பாராட்டு
x
தினத்தந்தி 13 May 2018 10:45 PM GMT (Updated: 13 May 2018 10:44 PM GMT)

பிளாட்பாரத்திற்கும், ரெயிலுக்கும் இடையே சிக்கிய சிறுமியை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

மும்பை,

பிளாட்பாரத்திற்கும், ரெயிலுக்கும் இடையே சிக்கிய சிறுமியை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

கீழே விழுந்த சிறுமி

தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்தவர் முகமது திஷான். இவர் கடந்த வெள்ளிக்கிழமை மனைவி மற்றும் 5 வயது மகளுடன் ஹாஜி அலி தர்காவிற்கு சென்றார். பின்னர் அன்று மாலை மின்சார ரெயில் மூலம் பிவண்டி செல்ல மகாலெட்சுமி ரெயில் நிலையம் வந்தார். அப்போது அங்கு வந்த மின்சார ரெயில் ஒன்றில் முகமது திஷான் குடும்பத்தினர் ஏறினர்.

இதில் கணவன், மனைவி 2 பேரும் ஏறிய நிலையில் சிறுமி திடீரென நிலைதடுமாறி ரெயிலில் இருந்து கீழே விழுந்தாள். அப்போது அவள் ரெயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கினாள்.

காப்பாற்றிய வீரர்

இதைபார்த்து அங்கிருந்தவர்கள் பதறிப்போயினர். இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாநில பாதுகாப்பு படை வீரர் சச்சின் என்பவர், மின்னல் வேகத்தில் பாய்ந்து ரெயிலுக்கும், பிளாட்பாரத்திற்கு இடையே சிக்கிய சிறுமியை மீட்டார்.

இதனால் அந்த சிறுமி காப்பாற்றப்பட்டாள். பாதுகாப்புபடை வீரர் 3 வினாடிகளில் சிறுமியை மீட்டு இருந்தார். மேலும் ஒரு வினாடி தாமதித்து இருந்தாலும் 2 பேரும் ரெயிலில் சிக்கி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிகள் முழுவதும் ரெயில்நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.

அதிகாரிகள் பாராட்டு

இந்தநிலையில் தன் உயிரை பணயம் வைத்து துணிச்சலுடன் சிறுமியை காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரரை அங்கு இருந்த பயணிகள் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள் பாராட்டினர். இதுகுறித்து மேற்கு ரெயில்வே முதன்மை பாதுகாப்பு துறை கமிஷனர் ஏ.கே.சிங் கூறுகையில், “ பாதுகாப்பு படை வீரர் சிறுமியை காப்பாற்றும் வீடியோ காட்சிகளை பார்த்தேன். அவரது துணிச்சலை கண்டு வியப்படைந்தேன். அந்த வீரருக்கு உரிய சன்மானம் வழங்கப்படும்” என்றார்.

இதே போல சிறுமியின் பெற்றோரும் பாதுகாப்பு படை வீரர் சச்சினுக்கு நன்றி கூறினர்.

Next Story