முன்விரோதத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்; 4 பேருக்கு அரிவாள் வெட்டு


முன்விரோதத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்; 4 பேருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 16 May 2018 10:45 PM GMT (Updated: 16 May 2018 7:44 PM GMT)

முத்துப்பேட்டை அருகே முன்விரோதத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே பேட்டை புதுக்கோட்டகம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 28) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவஞானம் மகன் கோபாலகிருஷ்ணன் (40) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி பிரச்சினைகளும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் கட்டை, கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டி கொண்டனர்.

4 பேருக்கு அரிவாள் வெட்டு

இதில் ஒருதரப்பை சேர்ந்த பாலசுப்பிரமணியன், அவருடைய அக்காள் மாரியம்மாள் (35) என்பவருக்கும், மற்றொரு தரப்பை சேர்ந்த சிவஞானம் மகன் பூமிநாதன் (37), ராஜேந்திரன் மகன் அபிஷேக் (19) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து இரு தரப்பினரும் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story