அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 85.38 சதவீதம் பேர் தேர்ச்சி


அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 85.38 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 16 May 2018 11:00 PM GMT (Updated: 16 May 2018 7:45 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 85.38 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரியலூர்,

தமிழகத்தில் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் மாணவர்களின் மன உளைச்சலை தடுக்கும் பொருட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ, மாணவிகளின் விவரம் வெளியிடப்படவில்லை. அந்த வகையில், அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து நேற்று காலை முதலே பிளஸ்-2 தேர்வு முடிவு குறித்த விவரம், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சரியாக 9.30 மணியளவில் அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் தேர்வு முடிவு வெளியானதும், அரியலூர் மாவட்ட பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் பிளஸ்-2 தேர்வு முடிவு ஒட்டப்பட்டன. அதில் மாணவரின் பெயர், மதிப்பெண்கள் விவரம், தேர்ச்சி விவரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தன. தேர்வு முடிவுக்காக ஆர்வத்துடன் காத்திருந்த மாணவ, மாணவிகள் தங்களது பள்ளிக்கு வந்து தேர்வு முடிவை தெரிந்து கொண்டனர். தேர்ச்சி பெறாத சில மாணவர்கள் மட்டும் சோகத்துடன் காணப்பட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் 3 ஆயிரத்து 810 மாணவர்களும், 4 ஆயிரத்து 508 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 318 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 33 மாணவர்களும், 4 ஆயிரத்து 69 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 102 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 85.38 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 88.48 ஆகும். கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு 3.1 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 26-வது இடத்தில் இருந்த அரியலூர் மாவட்டம் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் 31-வது இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வு முடிவு வந்தது. அதன்மூலம் மாணவ-மாணவிகள் தங்களது மதிப்பெண்களை அறிந்து கொண்டனர். இதனால் பலர் பள்ளிகளுக்கு நேரடியாக செல்லவில்லை. குறைந்த அளவிலான மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள பயின்ற பள்ளிகளுக்கு வந்ததை காண முடிந்தது.

இதே போல் அரியலூர் பஸ் நிலையம் அருகேயுள்ள மாவட்ட மைய நூலகம் மற்றும் கிளை நூலகங்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தகவல் சேவை மையம் உள்ளிட்ட இடங்களிலும் பிளஸ்-2 தேர்வு முடிவை கட்டணமின்றி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு மாணவ, மாணவிகள் சென்று தேர்வு முடிவை பார்வையிட்டு மதிப்பெண் விவரத்தை பிரிண்ட் எடுத்து கொண்டனர். 

Next Story