சுந்தரசோழபுரத்தில் மஞ்சுவிரட்டு: 350 காளைகள் சீறிப்பாய்ந்தன


சுந்தரசோழபுரத்தில் மஞ்சுவிரட்டு: 350 காளைகள் சீறிப்பாய்ந்தன
x
தினத்தந்தி 19 May 2018 10:45 PM GMT (Updated: 19 May 2018 9:29 PM GMT)

பொன்னமராவதி அருகே சுந்தரசோழபுரத்தில் நடந்த மஞ்சுவிரட்டில் 350 காளைகள் சீறிப்பாய்ந்தன.

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே சுந்தரசோழபுரத்தில் பிரசித்தி பெற்ற மலையபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் மஞ்சுவிரட்டு நடத்த ஊர்பொதுமக்கள், இளைஞர்கள் முடிவு செய்தனர். அதன்படி மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் சுந்தரசோழபுரம் கண்மாயில் நடந்து முடிந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கினர்.

பின்னர் நேற்று காலை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 350 காளைகளை உரிமையாளர்கள் ஆங்காங்கே அவிழ்த்து விட்டன. பின்னர் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியது. அப்போது அங்கு கூடிநின்ற பொதுமக்கள் கைதட்டியும், விசில் அடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு துண்டு, வேட்டிகளை பரிசாக பெற்றனர். மஞ்சுவிரட்டை பொன்னமராவதி, சுந்தரசோழபுரம், காரையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமபொதுமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் பொன்னமராவதி போலீசார் செய்து இருந்தனர். மஞ்சுவிரட்டுக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Next Story