ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளுக்கான கர்நாடக மேல்-சபை தேர்தலில் 76 சதவீத ஓட்டுப்பதிவு


ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளுக்கான கர்நாடக மேல்-சபை தேர்தலில் 76 சதவீத ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 8 Jun 2018 10:00 PM GMT (Updated: 8 Jun 2018 9:37 PM GMT)

ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளுக்கான கர்நாடக மேல்-சபை தேர்தலில் சுமார் 76 சதவீத ஓட்டுகள் பதிவானது.

பெங்களூரு, ஜூன்.9-

ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளுக்கான கர்நாடக மேல்-சபை தேர்தலில் சுமார் 76 சதவீத ஓட்டுகள் பதிவானது.

ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக...

கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் சங்கரமூர்த்தி, ராமச்சந்திரகவுடா, அமர்நாத் பட்டீல், கணேஷ் கார்னிக், ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, மரிதிப்பேகவுடா ஆகியோரின் பதவி காலம் நிறைவடைகிறது. இதையடுத்து கர்நாடக தென்கிழக்கு, கர்நாடக தென்மேற்கு, கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதிகள், கர்நாடக தென்மேற்கு, கர்நாடக வடகிழக்கு, பெங்களூரு பட்டதாரி தொகுதிகளுக்கு 8-ந் தேதி(அதாவது நேற்று) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி மேற்கண்ட 6 தொகுதிகளில் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களித்தனர். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு 8 சதவீதம், 11 மணிக்கு 19.52 சதவீதம், 1 மணிக்கு 34.63 சதவீதம், 3 மணிக்கு 47.84 சதவீதம் ஓட்டுகள் பதிவாயின. இறுதியில் கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர் தொகுதியில் 91.84 சதவீத ஓட்டுகளும், கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதியில் 79.91 சதவீதமும், கர்நாடக தென்மேற்கு ஆசிரியர் தொகுதியில் 80.45 சதவீதமும், கர்நாடக தென்மேற்கு பட்டதாரி தொகுதியில் 70.04 சதவீதமும், பெங்களூரு பட்டதாரி தொகுதியில் 64.11 சதவீதமும், கர்நாடக வடகிழக்கு பட்டதாரி தொகுதியில் 70.13 சதவீத ஓட்டுகளும் பதிவாயின.

76 சதவீத ஓட்டுகள்

ஒட்டுமொத்தமாக சுமார் 76.08 சதவீத ஓட்டுகள் பதிவாயின. ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குச்சீட்டு முறையில் இந்த தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தன. இதில் பதிவான ஓட்டுகள் வருகிற 12-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


Next Story